அநாகரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் தபால் தலை...
அநாகரிக தர்மபாலவின் 150வது பிறந்தநாளையொட்டி இந்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது. யார் இந்த அநாகரிக தர்மபாலா?
இலங்கை பௌத்த துறவியான அநாகரிக தர்மாபாலவுக்கு இரண்டு முகங்கள் உண்டு.
இலங்கையில் காலூன்றிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர். பௌத்தத்தை நவீனச் சிந்தனைகள் வழியாகப் பரப்பியவர். சிங்களர்களின் மூடநம்பிக்கைகளை எதிர்த்த சீர்திருத்தவாதி. தமிழகத்தில் அயோத்திதாசர் போன்ற சிந்தனையாளர்களுடன் இணைந்து செயல்பட்டவர்.
தர்மபாலவுக்கு இருக்கும் இன்னொரு மோசமான முகம் அவர் இனவெறியர் என்பது. ஹிட்லரின் வழியில் 'சிங்களர்கள் ஆரியர்கள். அவர்களே இலங்கையை ஆளப்பிறந்தவர்கள்' என்றார்.
தமிழர்களும், முஸ்லீம்களும் இரண்டாந்தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்பட வேண்டும் என்ற விஷ எண்ணத்தை விதைத்ததில் அநாரிக தர்மபாலவுக்கு முக்கியமான இடம் உண்டு. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் குறித்து பல மோசமான நச்சுக்கருத்துக்களைச் சொன்னவர். இலங்கையில் சிங்களம்தான் ஆட்சி மொழி, சிங்களர்களுக்குத் தமிழர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று முன்னெடுக்கப்பட்ட சிங்கள பௌத்தப் பேரினவாதத்துக்கு அநாகரிக தர்மபாலாவும் ஒரு முன்னோடி.
தமிழர்கள் மீதான இனப்படுகொலையை அடுத்து முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களும், அவர்கள் வழிபாட்டு தலங்கள் மீதான வன்முறைகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதை மேற்கொண்டுவரும் சிங்கள இனவாத அமைப்பான பொதுபல சேனா, அநாகரிக தர்மபாலவைத்தான் தங்கள் முன்னோடியாக முன்னிறுத்துகிறார்கள்.
"இலங்கை அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானது என்ற கொள்கையை எதிர்க்க வேண்டும். அப்படிச் செயல்பட வேண்டுமானால் அனைத்து சிங்களர்களும் அநாகரிக தர்மபால போல ஆக வேண்டும்" என்று பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொடே அத்தே ஞானசேர தேரர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
‘இலங்கை அரசின் இனப் படுகொலைகளை விசாரிக்க வேண்டும். ராஜபக்சே போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கைகளைத் தமிழர்கள் முன்வைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் மோடி தலைமையிலான அரசு, சிங்களப் பேரினவாதக் கருத்தாக்கத்துக்கு வலுசேர்த்த அநாகரிக தர்மபாலாவுக்கு தபால் தலை வெளியிட்ட மோடி அரசின் நிர்வாகம் கண்டிக்க பட வேண்டிய ஒன்றாகும்.
சென்ற நாடாளுமன்றத் மோடி ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்’ என்று பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் ஈழப்பிரச்னையில் என்ன முன்னேற்றம் ஏற்படவில்லை. காங்கிரஸ் ஐந்து ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிராகச் செய்தவற்றை மோடி அரசு கணிசமான நாட்களில் செய்துள்ளது. மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சே அழைக்கப்பட்டார். இலங்கையில் நடைபெற்ற ராணுவக் கருத்தரங்கில் பா.ஜ.க. சார்பாக சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு இதுவரை மோடி அரசு உருப்படியாக எந்தத் துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. இரண்டுமுறை ராஜபக்சே தன்னிச்சையாக மீனவர்களை விடுவித்தாரே தவிர, இந்திய அரசின் சார்பில் எந்தக் கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே சுப்பிரமணியன் சாமி. ’தமிழக மீனவர்களின் படகுகளை நான்தான் பிடித்துவைத்துக்கொள்ளச் சொன்னேன்’, ‘ராஜபக்சேவுக்குப் பாரத ரத்னா விருது தர வேண்டும்’ என்றெல்லாம் சுப்பிரமணியன் சுவாமி தெரிவிக்கும் கருத்துகள் அதிர்ச்சியின் உச்சமாக காணப்படுகின்றது.
நன்றி - இணையம்
Comments
Post a Comment