இலங்கையில் சிறுபாண்மையோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
உலகில் பல்வேறு நாடுகளில் சிறுபான்மையினர்
பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களைப் பாதுகாப்பது ஒவ்வொறு
தேசிய அரசுகளினதும் கடமையாக உள்ளது. ஒரு சில அரசுகள் சிறுபான்மையினர் தொடர்பில்
கரிசனை கொண்டாலும் இன்னும் சில அரசுகள் அம்மக்கள் குழுவுக்கு எதிரான
சட்டங்களையும், அடக்குமுறைகளையும் பிரயோகித்து வருகின்றது.
சமூக, அரசியல், பொருளாதாரப் பரப்பில் அதிகாரம்,
அந்தஸ்து மற்றும் சலுகைகள் அல்லது முன்னுரிமைகள் குறைந்த ஒரு மக்கள் வகுப்பினரையே
சிறுபான்மையினர் என அழைக்கிறோம். இவ்வாறாக ஏனைய நாடுகளைப் போல இலங்கையிலும்
குறிப்பாக இலங்கை அரசியலில் சிறுபான்மையோர் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆரம்பம்
முதல் இன்றுவரை முகம்கொடுத்து வருகின்றனர். அவற்றை இனி விரிவாக ஆராய்வோம்.
இலங்கை அரசியலில் சிறுபான்மையோர் எதிநோக்கும்
பிரச்சினைகள்
இலங்கை அரசியலில் சிறுபான்மையோர்
சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் தற்காலத்திலும் பல்வேறு சவால்களை சமுக,
பொருளாதார, அரசியல் ரீதியில் எதிர்நோக்கி வருகின்றனர். இலங்கையில்
சிறுபான்மையோருக்கு எதிரான உணர்வுகள் காலனித்துவ காலத்திற்கு முன்பு இருந்தே
காணப்பட்டாலும் அது காலனித்துவதிற்குப் பின்னர்தான் வெளிப்பட்டது. இலங்கை
அரசியலில் சிறுபான்மையோர் எதிர்நோக்கும் சவால்களை சுதந்திரத்திற்கு முன்னும்,
பின்னும் தற்காலம் எனும் உப தலைப்புகளில் ஆராய்வோம்.
சுதந்திரதிரத்திற்கு முன்பு
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இனத்தை
அடிப்படையாகக் கொண்ட தேசிய வாதம் இலங்கையில் எழுச்சியடைந்தது. பிரித்தானியர்
அறிமுகப்படுத்திய பிரதிநிதித்துவ முறையினால் சிங்கள தமிழ் தலைவர்கள் பிளவுபட்டு
அரசியலில் செயற்பட்டனர். சோல்பரி ஆணைக்குழுவிடம் சாட்சியளித்த தமிழ் தலைமைகள்
“பெரும்பான்மையினரின் ஆதிக்க அரசியலுக்குள் சிறுபான்மையினரான நாங்கள்
விழுங்கப்பட்டு விடுவோம்” என்று கூறினர். இதிலிருந்து இலங்கை பெரும்பான்மையினர்
அரசியலில் சிறுபான்மை இனங்கள் எவ்வளவு அச்சம் கொண்டு காணப்பட்டது என்பதை
இந்நிகழ்வு காட்டுகின்றது.
மேலும் மேல்மாகாணத்தில் தமிழருக்கான ஒரு ஆசனம்
பெறுவதில் சிங்கள தலைவர்களின் ஒத்துழைப்பு இன்மை, 50-50 என்ற சிறுபான்மை, பெரும்பான்மை பிரதிநிதித்துவ
கோரிக்கையை எதிர்த்தமை, சிங்கள மொழி தேசிய மொழியாக்கப்பட வேண்டும் என
பிரித்தானியரிடம் கோரியமையை இங்கு இலங்கை அரசியலில் சிறுபான்மையோர் எதிர்நோக்கிய
சவாலாக சுட்டிக் காட்டலாம். 1915இல் சிங்கள முஸ்லிம் கலவரம் வெடிக்கவும் இவ் சிங்கள அரசியலே
காரணமாக அமைந்தது. இத்தாக்குதல் பொருளாதரத்தில் முன்னேறி இருந்த இலங்கையின்
இரண்டாவது சிறுபான்மை இனத்திற்கு எதிராக நடாத்தப்பட்டது. இத்தாக்குதல் முழுக்க
முழுக்க அரசியல் ரீதியான தாக்குதலாகவே இருந்தது. அக்காலத்தில் கல்வி ரீதியில்
முன்னேறி இருந்த தமிழ் சிறுபான்மையினர் மீதும் சிங்கள அரசியல் வாதிகள்
வெறுப்புனர்வையே கொண்டிருந்தனர். இலங்கை அரசியலில் சிறுபான்மையோர் எதிர்நோக்கும்
பிரச்சினை 1948 சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. ஆனால் இது முன்னரை விட மிகத்
தீவிரமாக இருந்தது.
சுதந்திரத்திற்குப் பின்னர்
சுதந்திரத்திற்குப் பின்னர் பெரும்பான்மை
சிங்களவர்கள் அதிகாரத்தை பெற்றமையால் உருவான சிங்கள அரச தேசியவாதம் பகிரங்கமாகவே
சிறுபான்மையினருக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமூக, பொருளாதார, அரசியல், மொழி
ரீதியில் சட்டங்களை உருவாக்கத்தொடங்கினர். குறிப்பாக 1948ஆம் ஆண்டைய பிரஜாஉரிமைச் சட்டம் இந்திய
வம்சாவளியினரின் குடியுரிமையை மறுத்ததுடன் அவர்களை நாடற்றவர்களாக்கியது. 1958இல் உருவாக்கிய தனிச் சிங்களச்சட்டம் தமிழ்
மொழியைப் பேசிய சிறுபான்மை இனங்களை மொழிரீதியில் அன்னியப்படுத்தின.
உலகெங்கிலும் உள்ள அரசுகள் தங்கள்
அதிகாரத்திற்கு கீழ் உள்ள தேசிய இனங்களை இல்லாதொழிக்க பாவிக்கும் பொதுவான ஆயுதம்
குடியேற்றத் திட்டமாகும். அவ்வாறானதொரு குடியேற்றத் திட்டம் இலங்கையிலும்
ஏற்படுத்தப்பட்டது. இதனால் இலங்கையின் தேசிய சிறுபான்மை இனங்கள் தமது அரசியல்
அதிகாரத்தை இழக்க நேரிட்டது இவ் குடியேற்றத் திட்டங்கள் குறிப்பாக அம்பாறை,
திருகோணமலை, வடக்கின் சில மாவட்டங்களை
மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. பொலநறுவை, அனுராதபுரம் மொனராகலை போன்ற
மாவட்டங்களில் போதிய நிலப்பிரதேசம், நீர்ப்பாசன குளங்கள் இருந்த போதும்
அம்மாவட்டங்கள் தேர்வு செய்யப்படாமைக்கு காரணம் அங்கு செறிவாக சிங்களவரே
வாழ்ந்தனர். அம்பாறை, திருகோணமலை, வடக்கில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் தமிழ்,
முஸ்லிம் சிறுபான்மையோர் ஆவர். இந்நிகழ்வு சிறுபான்மையினருக்கு எதிராக அரசியல்
ரீதியல் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுக் கொடுமையாகும்.
வட, கிழக்கு
மாகாணங்களில் நடைபெறும் இவ்நிலக் குடியேற்றத் திட்டங்களில் பாரபட்சமானது, ஐக்கிய
தேசியக்கட்சி ஆட்சி புரிந்த பொழுது இதை ஓரளவு மறைவாகச் செய்து வந்தது. ஆனால், இன்று அது
அரசாங்கத்தின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கையாக உள்ளது.
இப்பிரதேசங்களிலுள்ள தமிழ் பேசும் மக்களைப் படிப்படியாகச் சிறுபான்மையோர்
நிலைக்குக் கொண்டு வருவது தான் இத்தகைய பாரபட்சக் குடியேற்றத் திட்டத்தின்
நோக்கமாகும். தொடர்ந்து 1970இல் கொண்டுவந்த
பல்கலைக்கழக தரப்படுத்தல் சட்டம் கல்வியில் முன்னேறி இருந்த தமிழ் சிருபாண்மையின
மாணவர்களின் பல்கலைகழக அனுமதியை மட்டுப்படுத்தியது. இது தமிழ் மாணவர்கள் பிரிவினை கோசம் எழுப்புவதற்கு காரணமாக
இருந்தது என்று இலங்கையின் கல்வியும் முரண்பாடும் என்ற கட்டுரையில் சுனில்
பஸ்திரால் எழுதியுள்ளார். 1948இன் பின்
ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்புகளில் சமஷ்டி ஆட்சியைக் கொண்டுவர தமிழ், முஸ்லிம் தலைமைகள் பல தீவிர முயற்சிகளை எடுத்தனர். ஆனால் அவை தோல்வியிலேயே முடிந்தது. தேசிய இனப்பிரச்சினையை மிக ஆழமாக்கியதில் 1978இல் அமுலுக்கு வந்த ஜே.ஆர்.
ஜெய வர்த்தனாவின் அரசியலமைப்பிற்கு பெரும் பங்குள்ளது. அழிவும் துயரமும் மனக்கசப்பும் முரண்களும் நீடித்து வந்த காலகட்டத்தில் மீண்டுமொரு அரசியல் அமைப்பு இறுக்கம் நிகழ்ந்தது பதற்றத்தையும் அச்சத்தையும் சிறுபான்மையினருக்கு ஏற்படுத்தியது.
“தனது அடிமை நிலையை உணர்ந்து, தனது
விடுதலைக்காகப் போராட எழுச்சிகொண்டுள்ள ஓர் அடிமை, அந்நிலையில் தனது அடிமைத்தனத்தில் அரைப்பங்கை இழந்து விடுகிறான்” என லெனின் கூறியுள்ளதற்கு அமைய இதனைத் தொடர்ந்து
சிறுபான்மையினர் குறிப்பாக தமிழ் மக்கள் சுய நிர்ணைய உரிமை கேட்டு அரசாங்கத்திற்கு
எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர வழங்கப்பட்ட
மாகாண சபை முறை எனும் அதிகாரப்பகிர்வு ஏற்பாடும் ஒரு நியாயமான தீர்வாக
இருக்கவில்லை. 70,000 இந்தியத் துருப்புகளின் பாதுகாப்பில் உருவாக்கிய 13வது திருத்தம் எனும் மாகாண சபைக்கு அப்பால் பிரிவினை கோரிய மக்களுக்கு
இதுவரை தீர்க்கமான தீர்வு வழங்கப்படாமலே உள்ளது.
மேலும் இப்பிரிவினைப் போராட்டம் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர்
அரசு சிறுபான்மையினரின் அபிலாசைகள் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டது. தற்போதும்
யுத்ததிற்குப் பின்னரும் இலங்கை அரசியலில் சிறுபான்மையினர் பல்வேறு பிரச்சினைகளை
எதிர்கொண்டு வருகின்றனர். அவற்றை இனி நோக்கலாம்.
தற்காலம்/யுத்ததிற்குப்
பின்னரான காலம்
இலங்கையின் அரசியலில் சிறுபான்மையினர்
சமுக, அரசியல், பொருளாதார ரீதியில் தொடர்ந்தும் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர்.
இதனால் அரசியலிலும் அவர்கள் பலமுடன் இருக்கவில்லை. சிறுபான்மை அரசியல் கட்சிகளால்
தனித்து மக்கள் நலன் பேணும் நடவடிக்கைகளைச் செய்ய முடியாதுள்ளது. பெரும்பான்மைக்
கட்சிகள் சிறுபான்மைக் கட்சிகளுக்குள் பிளவுகளை எற்படுத்தி தமது அரசியல் நலன்களை
அடைந்து வருகின்றது. அரசியல் சுதந்திரம் என்பது அரசின் தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டில் பங்குபற்றுவதற்கு உள்ள சுதந்திரமே ஆகும்.
கடந்த 61 வருட காலமாக தமிழ் - முஸ்லிம் மக்களை இச்செயற்பாட்டில் விலக்கி இருந்த நிலைமையையே நாம் காண முடிந்தது.
சமத்துவ கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அரசை கட்டியெழுப்பும் நிலைமை இன்னும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை என்றே கூறலாம்.
இன்று யுத்தம் முடிவுற்றாலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை தமிழ்
மக்கள் பல்வேறு பிரச்சினைகளை தொடர்ந்தும்
எதிர்கொண்டு வருகின்றனர். அடிப்படை வசதி வாய்ப்புக்கள் கிடைக்காமை, மீள்குடியேற்றம் சீரின்மை, தடுப்பு முகாம்
வாழ்க்கை, அகதி வாழ்க்கை, தகுந்த வேலை வாய்ப்பின்மை, போதிய கல்வி
வசதியின்மை போன்ற பல்வேறு இன்னல்களை நாளாந்தம் அனுபவித்துக்
கொண்டிருக்கிறார்கள். மக்கள் உளவியல் ரீதியில் இன்றும் சீராக மீளாத நிலையில்
உள்ளனர்.
ஹோரோவிட்ஸ் என்பவர் “தேசிய இனப்பிரச்சினையானது
தனிநாட்டுக்கோரிக்கையாக எழுந்துள்ள தேசிய இனங்களையும் அவற்றின் பிரதேச
பொருளாதாரத் தன்மைகளையும் அவற்றின் போக்குகளையும் அடிப்படையாகக்
கொண்டது” என்றுள்ளார். அந்த
வகையில் தமிழர் பகுதிகளில் பொருளாதாரப் பின்னடைவுகளும் நிலவுகின்றன.
தமிழர்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் ஆழப் புதைக்கப்படுகின்றன.
தமிழர்களின் தாயகப் பகுதிகளில் நாளுக்கு நாள் புதிதுபுதிதாகக் கட்டப்பட்டு வருகின்ற ‘விகாரைகள்’ இதற்கு சான்று
பகர்கின்றன. தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்ற நடவடிக்கைகள்
இடம்பெறுகின்றன. தட்டிக்கேட்பதற்கு யாரும் இல்லாத நிலையில், தமிழினம் சமூக, பொருளாதார, பண்பாட்டு
ரீதியில் அடக்கி ஆளப்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றது.
அதுமட்டுமன்றி
அண்மைக்காலமாக முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் பரவலாக
இடம்பெற்று வருகின்றது. அவற்றில் ஈடுபடுபவர்கள் பௌத்த பிக்குகளாக இருப்பது
ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பொது பல சேன, ராவண பலய போன்ற பௌத்த அமைப்புகள்
முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களை, வர்த்தக நிலையங்களை தாக்குதல், இனச்சுத்திகரிப்பு, ஹலால்
உணவுக்கு எதிர்ப்பு போன்ற நடவடிக்கையால் இன்று முஸ்லிம் சிறுபான்மை சமுகம்
அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றது. இது அரச ஆதரவுடன் நடந்தேறுவதால் அவர்கள் மேலும்
நின்மதியின்றி உள்ளனர். இதனால் சிறுபான்மையினர் இலங்கை அரசியலில் தொடர்ந்தும்
ஓரங்கட்டப்பட்டே வந்திருக்கின்றனர்.
இலங்கையில்
மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரம் இன ரீதியிலான சிறுபான்மையினர் அரசியலில் ரீதியில்
பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளக் காரணமாகவுள்ளது. நாட்டில் போர் முடிவுற்று
நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த பின்னும் இன ரீதியிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ,
அரசியல் தீர்வு வழங்கவோ அரசு முன்வரவில்லை. இது பன்மைத்துவ சமூகத்தில் அரசியல்
உறுதிப்பாட்டை ஏற்படுதுவதற்கு தடையாக உள்ளது என அரசியல் ஆய்வாளர்கள்
குறிப்பிடுகின்றனர். இவை சிறுபான்மையினரின் தேவைகளுக்கு அரசு பொறுப்பற்று
இருப்பதனைக் காட்டுகின்றது. அரசின் அதிகாரத்தை தனியுடமையாக பிரயோகிக்கும் சிங்கள
அரசு மேலும்மேலும் சிறுபான்மை மக்களை தமது இரும்புக்கரம் கொண்டு அடக்குவதைக்
காணலாம் இதற்கு வடக்கின் இராணுவ பிரசன்னம், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை
உதாரணமாகக் கூறலாம்.
சிறுபான்மையோர்
தொடர்பில் ஐ.நா சபை ஏற்படுத்திய சர்வதேச சட்டங்களை இலங்கை மீறி வருகின்றது. அதனை
தட்டிக்கேட்கும் சர்வதேச சமூகத்தையும் இலங்கை சட்டைசெய்யாமல் தொடர்ந்தும் அதே
போக்கில் செல்கிறது. இதனால் பதிக்கப்படுவது சிறுபான்மையோர் மட்டுமன்றி
பெரும்பான்மையினரும் தான் இதனை அவர்கள் GSP+ வரிச்சலுகை, ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் தோல்வி போன்ற
விடயத்தில் அனுபவ ரீதியில் கண்டுகொண்டார்கள். இலங்கை அரசு சிறுபான்மையினரை
பாதுகாப்பதன் மூலம் சர்வதேசத்தின் நன்மதிப்பை பெறுவதோடு பல உதவிகளையும் பெற்று
நாட்டை அபிவிருத்தி செய்யலாம். இதனை இன்றைய அரசாங்கம் இன்னும் உணராமலேதான் உள்ளது.
ஆக்கம்:-
மீஸா பேகம்
Comments
Post a Comment