தமிழ் மொழியுரிமை நடைமுறையில் சாத்தியமாகாமைக்கான காரணம் என்ன?
இலங்கை அரசியலமைப்பின் கீழ் இந்நாட்டில் தமிழ் மொழிக்கான நடைமுறைச் செயற்பாட்டு உரிமைகள் எவையெனத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.
ஆனால் நாட்டின் அதியுயர் வழிகாட்டியான குறித்த அரசியலமைப்பின் விதிமுறைகள் பயனற்றவையாக, பயன்படுத்தப்படாதுள்ளவையாக இருப்பதை எவரும் கவனத்தில் கொள்வதில்லை. அரசியலமைப்பைப் போற்றிப் பாதுகாத்து அதன் வழிகாட்டலுக்கிணங்க செயலாற்றுவோம் என்று உறுதியுரை மேற்கொண்டு பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அரசியல் நிர்வாக அமைப்புகளாகட்டும் அரச அலுவலராகட்டும் தாம் மேற்கொண்ட சத்தியப்பிரமாணத்தின் படி நடப்பதாகத் தெரியவில்லை. இது யதார்த்த நிலை.
அரசியலமைப்பின் ஒரு அங்கமாகவுள்ள மொழியுரிமை பற்றிய அத்தியாயங்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றமை, புறக்கணிக்கப்படுகின்றமை அரசியலமைப்பை மதியாத் தன்மையாகவே நோக்கப்பட வேண்டியது. நாட்டின் வழிகாட்டியாகவுள்ள அரசியலமைப்பை மீறிய, மீறிச் செயற்படும் குற்றத்திற்காளாகும் நிலையுள்ளது.
ஆனால் அரசியலமைப்பைப் பேண வேண்டியது பற்றி உரக்கக் குரல் கொடுக்கும் அரசியலமைப்புக்குப் புறம்பாக செயற்படுகின்றார்கள் என்று தமிழர் தரப்பை அடிக்கடி குற்றம் சாட்டும் நீதிமன்றம் வரை கொண்டு செல்லும் தரப்பினர் அரசியலமைப்பின் விதிமுறைகளைத் தாமே மீறி வருவதை, செயற்பட்டு வருவதை புரியாதவர்களாக இருப்பது இந்த நாடு செய்த பாவம்.
1956 இல் இந்நாட்டில் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டத்தால் தமிழ் மொழியின் உரிமை இந்நாட்டில் பறிக்கப்பட்டது. அதன்படி தமிழர்கள் இந்நாட்டின் உரிமையற்ற குடிமக்களாக்கப்பட்டனர்.
ஏற்கனவே நாட்டின் ஒரு தொகுதி தமிழ் மக்களின் குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்டு நாட்டின் அந்நியமாக்கப்பட்டிருந்த நிலையில் எஞ்சியிருந்த தமிழ் மக்களின் மொழியுரிமையும் பறிக்கப்பட்டு ஒட்டு மொத்த தமிழர்களும் இந்த இலங்கைத் தீவில் உரிமையற்ற அந்நியராக்கப்பட்டு அவதிக்குள்ளாக்கப்பட்டனர். நாட்டில், நாட்டு மக்களிடத்தில் இன ரீதியான பிரிவினை ஏற்படுத்தப்பட்டது. நாட்டில் பிரிவினை வாதத்திற்கும் இன்றைய அவலங்களுக்கும் வித்திடப்பட்டது.
நாட்டு மக்களிடம் பிரிவினை வாதத்தைப் புகுத்தியவர்கள் நாடாண்ட டீ.எஸ்.சேனநாயக்க மற்றும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆகியோரைப் பிரதமர்களாகக் கொண்டிருந்த அரசாங்கங்களே என்பது வரலாற்றில் பதிவேறியுள்ளது. ஆனால் அந்த உண்மை மறைக்கப்பட்டு தவறுகள் பாதிக்கப்பட்டோர் மீது சுமத்தப்படுகின்றது.
எது எவ்வாறிருப்பினும் தொடர்ந்தும் சண்டித் தனம் காட்ட முடியாது என்ற நிலையில் இன்று சட்டரீதியாக அரசியலமைப்பின் மூலம் தமிழ் மொழி தேசிய மொழியாகவும் நிர்வாக மொழியாகவும் ஏற்கப்பட்டுள்ளது. வெளிப்படையாக நோக்கும் போது இந்நாட்டில் தமிழ் மொழியை நிர்வாக மொழியாக நடைமுறைப்படுத்த பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.
அது நடைமுறையில் செயற்படுத்தப்படாத வெறும் கண்துடைப்பாகவே, ஏமாற்றும் செயற்பாடாகவேயுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. நாட்டின் இன முரண்பாடுகளுக்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருவது மொழிப் புறக்கணிப்பே என்பதை மறைக்க முடியாது. புரிந்து கொள்ளப்படாத இந்த உண்மையை சுட்டிக்காட்டாதிருக்கவும் முடியாது. ஒதுக்கிவிடவும் கூடாது.
அரசியலமைப்பிலும் அதன் பதின்மூன்றாவது மற்றும் பதினாறாவது திருத்தங்கள் மூலம் தமிழ்மொழிக்கு தேசிய மற்றும் நிர்வாக மொழியுரிமைகள் வழங்கப்பட்டு அவற்றை செயற்படுத்துவதற்காக பல்வேறு விதப்புரைகளும் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு மட்டங்களில் வழங்கப்பட்ட மொழியமுலாக்கல் தொடர்பான விதப்புரைகள் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை, படுத்தப்படுவதில்லை, புறக்கணிக்கப்பட்டு வருவதற்கான ஏதுக்கள் எவையென எவரும் எண்ணிப்பார்ப்பதில்லை, ஆய்வு செய்வதில்லை.
இதுவே இன்று நம் நாட்டின் அரச இயந்திரத்தின் இயங்கும் நிலை. தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சு என்று ஒரு அமைச்சு உருவாக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரொருவரும் நியமனம் செய்யப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்டன. தற்போதும் செயற்படாத குறித்த அமைச்சுக்கு ஒரு பிரதியமைச்சரும் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.
ஆனால் எதுவித மாற்றமும் இன்றி குறித்த அமைச்சு வழமைப் போல் தமிழ் மக்களுக்கோ, தமிழ் மொழிக்கோ யாதொரு பயனும் அற்ற நிலையிலேயே செயற்படுகின்றது. அதன் செயற்பாடுகள் "குண்டுச் சட்டியில் குதிரை விடுவது' என்பார்களே அது போலவேயுள்ளது.
மொழிப் புறக்கணிப்பு தொடர்பில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்வதற்காகவென்று 1956 என்ற தொலை பேசி இலக்கம் குறித்த தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சால் வழங்கப்பட்டு காலங்களும் உருண்டோடிவிட்டன. குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பயன் பெற்றவர்கள், நிவாரணம் பெற்றவர்கள் எவரும் இன்று வரை கண்டறியப்படவில்லை என்ற உண்மை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கவனத்திற்கே விடப்பட வேண்டிய ஒன்றாகும்.
கோடிக்கணக்கில் செலவு செய்து நாட்டின் பல பாகங்களிலும் இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கென்று பட்டம் பறக்கவிட்டு வேடிக்கை காட்டிய அமைச்சு, மக்கள் குறை கேட்கவென்று வழங்கிய 1956 என்ற தொலைபேசி எண்ணுக்கு வந்த முறைப்பாடுகளில் எத்தனைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்தது என்பது பகிரங்கமாக வினவப்பட வேண்டிய வினாவாகும்.
அமைச்சுக்கு மேலதிகமாக அரச கரும மொழிகள் தொடர்பாக செயற்படுவதற்கு அரச கரும மொழிகள் ஆணைக்குழுவென்றொரு அமைப்பும் பல்லாண்டுகளாக செயற்பட்டு வருகின்றது. அதன் நோக்கம் எதுவும் உரியபடி நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதையிட்டு எவரும் அக்கறை செலுத்துவதில்லை. அதுவும் தேசிய மொழிகள் மற்றும் சமூக இணக்கப்பாட்டு அமைச்சைப் போன்றே தமிழ் மக்களுக்கு பயனற்ற ஒன்றாகவே நோக்கும் நிலையிலுள்ளது.
தமிழ் மொழியை நிர்வாக மொழியாக நாட்டில் நடைமுறைப்படுத்த அரசியலமைப்பு விதிகள், அமைச்சு, ஆணைக்குழு, அமைச்சர், பிரதியமைச்சர், ஆளணிகள் என்றெல்லாம் உள்ளமை போன்று துணைச் சட்டங்கள், சுற்று நிரூபங்கள், வழிகாட்டிகள் என்று பலவும் வெளியிடப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல ஒவ்வொரு அமைச்சிலும் திணைக்களத்திலும் மாகாண சபையிலும் மாநகர, நகர, பிரதேச சபைகளிலும் தமிழ் மொழியை நடைமுறைப்படுத்த, வழிகாட்டி செயற்படுத்த பொறுப்பான பதவிநிலை அலுவலர்கள் எவரென்று குறிப்பிடப்பட்ட பொது நிர்வாக அமைச்சின் சுற்று நிரூபம் வெளியிடப்பட்டு ஆண்டுகளும் கடந்து போகின்றன.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் போன்றவை தமிழ் மொழியை அதன் உரிமையை நிலை நிறுத்தும் நோக்கில் நீதிமன்றங்களையும் மனித உரிமை அமைப்பையும் நாடி தீர்ப்புகளையும் பெற்றுள்ளன. பெற்ற தீர்ப்புகளால் தீர்வுகள் இதுவரை கிட்டாமையும் அவதானிப்புக்குரியது.
குறித்த நிலையத்தைச் சார்ந்த லயனல் குருகே என்பவரின் பாடசாலை மாணவனான மகனால் தேசிய அடையாள அட்டையில் சிங்களவர்களது பெயர் விபரங்களும் தமிழ் மொழியிலும் இடம்பெற வேண்டுமென்று தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பின் படி ஆட்பதிவுத் திணைக்களம் எதிர்வரும் காலங்களில் சகல அடையாள அட்டைகளிலும் தமிழ் மொழியும் இடம்பெற வகை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அரசு சார் அமைப்புகளால் வெளியிடப்படும் சுற்று நிரூபங்கள், அறிக்கைகள், வெளியீடுகள், ஆவணங்கள், படிவங்கள் உட்பட சகலதும் மும்மொழிகளிலும் அதாவது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமைய வேண்டுமென்பது நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதியாக இருந்தபோதிலும் அது நடைமுறைப்படுத்தப்படுவ தில்லை என்ற முறைப்பாடுகள் நிறையவேயுள்ளன. முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு அவற்றை சீர்செய்ய எதுவித முயற்சிகளும் ஏற்பாடுகளும் செய்யப்படுவதாகவும் தெரியவில்லை.
பொதுப் போக்குவரத்து வாகனங்களில் புறப்படும் மற்றும் சேரும் இடங்கள் மும்மொழிகளிலும் இடம்பெற வேண்டும் என்ற விதியுள்ளது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பொதுப் போக்குவரத்து வாகனங்களான இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகளில் புறப்படும் மற்றும் சேரிடங்களில் தமிழும் இடம்பெறும் என்று தீர்ப்பளித்து ஆண்டுகள் மூன்றும் உருண்டோடிவிட்டன. ஆனால் நடைமுறையில் அது செயலுருப் பெறவில்லை. மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்வு மதிக்கப்படவில்லை. இதுவே நாட்டின் யதார்த்த நிலை.
நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. ஆனால் சமூக இணக்கப்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதி போதுமானதாயில்லை. இது பற்றி குறிப்பிட்டுக் காட்டுபவர்களும் எவரும் இல்லை. நாட்டில் சுமுக நிலை, அமைதி, இனங்களுக்கிடையே புரிந்துணர்வுடன் கூடிய இணக்கப்பாடு ஏற்படவும் நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக் காத்து பிரிவினைச் சிந்தனையை மழுங்கடிக்கவும் அடிப்படையாயமைவது இனங்களுக்கிடையேயான சமத்துவ உரிமை என்பது மறக்கப்படுகின்றது.
நாட்டிலே சமத்துவத்தைப் பேணி அதன்மூலம் நாட்டை வளம் மிக்கதாக, பிளவுபட்ட சிந்தனை அற்றதாக வழிப்படுத்த நாட்டு மக்களிடையே மொழி, இன, மத பேதங்கள் எவையும் அற்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். பேதங்களை வைத்துக் கொண்டு, வளர்த்துக் கொண்டு சமூகங்களிடையே இணக்கப்பாடு ஏற்பட, ஏற்படுத்த எந்தவொரு வழியுமில்லை. இதைப் புரிந்துகொள்ளும் சிந்தனைத் தெளிவும் எவரிடமும் அற்ற நிலை நாட்டின் அவலத்திற்கு வழி செய்துள்ளது.
"ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது' என்பர். அதுவே நமது நாட்டின் மொழிக் கொள்கை தொடர்பிலும் காணப்படுகின்றது. சட்டங்கள், துணைச் சட்டங்கள், சுற்று நிரூபங்கள், அறிவுறுத்தல்கள் மட்டுமல்ல பல தீர்ப்புகள் கூட நடைமுறைப்படுத்தப் படாத நிலைமை மொழியுரிமை, மொழிப் பயன்பாடு தொடர்பில் காணப்படுகின்றது. சுட்டிக் காட்டினாலும் பயனில்லை. எவரும் அலட்டிக் கொள்வதில்லை.
அதற்கோர் எடுத்துக் காட்டு கொழும்பு மாநகர சபையின் நிர்வாகம். கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டினால் திறக்கப்படும் என்பார்கள். நமது நாட்டில் தமிழ் மொழியுரிமையைச் செயற்படுத்தி, தமிழ் மக்களது அடிப்படை உரிமையை மதித்து அவர்களையும் இந்நாட்டின் தேசிய இனமாக, உரிமையுள்ள மக்களாக அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்காகவேயுள்ளது.
எவ்வளவு கேட்டாலும் கிடைப்பதில்லை. எப்படித் தட்டினாலும் வழி திறக்கப்படுவதில்லை. தமிழ் மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளக் காட்டப்படும் தயக்கம் இனங்களுக்கிடையேயான பிளவுகளுக்கும் பிரிவினைகளுக்கும் அடிப்படையானது. நாட்டில் பிரிவினை வாதிகளை இனம் காட்டுகின்றது.
பேச்சுப் போனால் மூச்சுப் போச்சு என்பர். தமிழ் மொழியின் உரிமையை மறுப்பது தமிழரின் மூச்சை நிறுத்துவது, மூச்சை விட முடியாது அழுத்தி சமூகக் கொலை செய்வதாயும் அமைகின்றது என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமே உணர முடியும்.
எனவே காகிதங்களுக்கும் பேச்சுகளுக்கும் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ள நடைமுறைப்படுத்தப்படாத மொழியுரிமையை தமிழ் மக்கள் அனுபவிக்க வழி திறந்து விட வேண்டியதன் தேவை உணரப்பட வேண்டும். தமிழ் மொழியின் நிர்வாக உரிமையை நடைமுறைப்படுத்த சாத்தியமான வழிமுறைகள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும்.
அதன் மூலம் நாட்டில் பிரிவினைவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். நாட்டின் ஒரு குடிமகன் அவன் தமிழனோ, சிங்களவனோ தனது அரசாங்கத்துடனான தொடர்புகளையும் அன்றாடக் கடமைகளையும் திருப்தியுடன் தன் தாய் மொழியில் ஆற்றிக் கொள்கின்றான் என்ற நிலை உருவானால் அதுவே நாட்டின் வளமாகும். ஆச்சரியம் மிக்க அமைதியான நாடாக்கும்.
நன்றி - த. மனோகரன்
Comments
Post a Comment