ஒற்றை ஆட்சி தத்துவங்களைக் கொண்ட இந்திய சமஷ்டி முறை 

அரசியல் முறைமையில் சமஷ்டிவாதம்என்ற பதம் அரசியல் அதிகாரங்கள் முழு நாட்டிலும் எவ்வாறு பங்கீடு செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்து விளக்கமளிக்கப்படுகின்றது. அதாவது மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அல்லது பிராந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான அதிகாரங்கள் எவ்வாறு பங்கீடு செய்யப்படுகின்றன, எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து சமஸ்டி வாதத்திற்கான விளக்கம் வழங்கப்படுகின்றன.

தற்கால அரசாங்க முறையானது சமஷ்டியாக அல்லது ஒற்றையாட்சியாக அல்லது இரண்டும் கலந்த ஒன்றாக காணப்படுகின்றது. உலகில் நடைமுறையிலுள்ள அரசாங்கங்களில் சமஷ்டி முறைக்கு உதாரணமாக ஐக்கிய அமெரிக்கா, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, கனடா போன்ற நாடுகளைக் கூறலாம். ஒற்றையாட்சி முறைமைக்கு உதாரணமாக பிரித்தானியா, பிரான்ஸ், இலங்கை, சீனா போன்ற நாடுகளைக் கூறலாம். இவ் இரண்டையும் விட சில நாடுகள் அதிகாரப் பிரிவினை தத்துவத்திற்கு இணங்க அரசாங்கத்தினை ஒழுங்கமைத்து மிக உயர்ந்த நிலையில் அதிகாரங்களை பங்கீடு செய்துள்ளன. இதனை இந்தியாவிலும் மறைந்த சோவித் ரஸ்சியாவிலும் காணமுடியும். இடைநிலைத் தன்னாட்சியுடைய அரசுகளாக அல்லது அரைகுறை சமஸ்டி அரசுகளாக இவைகள் அழைக்கப்படுகின்றன. இவ்வாறான சமஷ்டி ஆட்சிமுறை சில பண்புகளைக் கொண்டு காணப்பட வருகின்றது, அவற்றை இனி நோக்குவோம்.

சமஸ்டிவாதத்திற்கான அடிப்படை நிபந்தனைகள்

சமஷ்டி ஆட்சி உருவாவதற்கு சில பொதுவான நோக்கங்களின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய பல அரசுகள் ஒன்றிணைய வேண்டும். ஆனாலும் ஒரு சமஷ்டி அரசு வெற்றிகரமானதாக இயங்க வேண்டுமாயின் சில முக்கிய நிபந்தனைகளை சமஸ்டியில் இணைய விரும்பும் அரசுகளிடம் இருக்க வேண்டும், அவை
  •  புவியியல் தொடர்ச்சி
  •  சமுதாய ஆர்வம்
  • ஒத்ததன்மையுள்ள சமூக, அரசியல் நிறுவனங்கள்
  • சமத்துவம் பேணப்படல்
  • சமூகப் பொருளாதார அபிவிருத்தி
  • அரசியல் செயற்றிறன்
  • அரசியல் மற்றும் தேசிய ஒருமைப்பாடு
  • மத்திய மாநில இணைப்பு

என்பவை ஆகும். இவ்வாறான சிறப்பு அம்சங்களை கொண்டு காணப்படுவதும், ஒற்றை ஆட்சி தத்துவங்கள் அதிகம் உள்ளதுமான ஒரு சமஷ்டி முறைமைதான் இந்திய சமஷ்டி ஆகும். அவற்றின் சிறப்பம்சங்களை இனி நோக்குவோம்.

இந்திய சமஷ்டி அரசியலமைப்பு

முதலில் இந்திய அரசியலமைப்பினை நோக்குவோமாயின் மக்களின் இறைமை (Popular Sovereignty) என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் முகப்பில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்படுகிறது. “இந்திய மக்களாகிய நாங்கள் இந்தியாவை மனம் விரும்பி ஒரு முழு இறைமை பெற்ற மக்களாட்சிக் குடியரசாக அமைப்பது என்று உறுதி கொண்டு....” இவ்வாறான முகவுரை இந்தியாவை ஒரு முழு மக்கள் அதிகாரம் கொண்ட நாடாக காட்டுகின்றது. பல அரசியல் தலைவர்களும் அறிஞர்களும் ஒன்று கூடி சுமார் மூன்று ஆண்டுகள் இந்திய அரசியல் அமைப்பினை உருவாக்கிய போதிலும் அதில் காணப்படும் கோட்பாடுகளைக் கொண்டு அது கூட்டாட்சியா அல்லது ஒற்றையாட்சியா என்று குறிப்பிட்டு கூறமுடியாத அளவு அதன் பண்புகள் வேறுபட்டும் அதிகப்பட்டும் காணப்படுகின்றன. பொதுவாக சமஸ்டிக்கு பின்வரும் பண்புகள் காணப்பட வேண்டும்.
  • மத்திய – மாநில அரசுகள் :-

இந்தியாவில் மத்திய அரசு (Central Govt.) மாநில அரசு (State Govt.) என்று இயங்குகின்றன. 1935 இல் மத்திய மாநில அமைப்பு மேலும் விரிவு படுத்தப்பட்டது. சமஷ்டியை முறைப்படி ஏற்றது.
  • இரு அரசுகளுக்கிடையிலான அதிகாரப் பங்கீடு :-

1935 இல் இந்திய அரசுச் சட்டப்படி மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே நிலவ வேண்டிய அதிகாரங்களைப் பங்கிட்டன. அதே அமைப்பில் மத்திய, மாநிலத்திற்கு உரித்தான அதிகாரங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டன.
  1. மத்திய அரசின் அதிகாரம்:- அரசு திறமையாக வலிமையாக செயற்படுவதற்கான அதிகாரம், வெளிநாட்டு உறவு, பாதுகாப்பு, ரயில் போக்குவரத்து, தபால், தந்தி தொலைபேசி, நாணயம், வங்கி, விமான போக்குவரத்து, தேர்தல் என 97 அதிகாரம்.
  2. மாநில அரசின் அதிகாரம்:- மாநில அளவில் திட்டத்தை பெருக்கல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டல், காவல்துறை, தல ஆட்சி, கல்வி, சுகாதாரம், பொதுப்பணி, மருத்துவம், நீர்ப்பாசனம், உணவு உற்பத்தி, சிறைச்சாலை போன்ற 66 அதிகாரம்.
  3. பொதுவானவை:- திருமணம், குற்றச்சட்டம், விவாகரத்து, ஒப்பந்தங்கள், பிறப்பு-இறப்பு கணக்கு, விலைக்கட்டுப்பாடு, தொழிற்சங்கம் போன்ற 47 அதிகாரம்.

  •  மதம், இனம், மொழிப் பாதுகாப்பு:-

சமஷ்டி அரசின் மக்களிடையே அவர்களின் மதம், இனம், மொழி, கலாசாரம் ஆகியவைகளின் அடிப்படையில் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் இப்பிணைப்பு அதிகம் உள்ளது.
  • ஓர் எழுதப்பட்ட அரசியலமைப்பு:-

சமஸ்டிக்கு எழுதப்பட்ட நெகிழா அரசியலமைப்பு தேவையானதாகும். இந்திய அரசியலமைப்பு நெகிழும், நெகிழா தன்மையுடையது.
  •  நீதித்துறையின் சுதந்திரம்:-

சமஷ்டி அமைப்பில் உள்ள நாடுகளில் நீதித்துறை சுதந்திரமாக இயங்குவது அதன் தனிப்பண்பாகும். இந்தியாவின் தலைமை மற்றும் உயர்நீதிபதிகள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். ஆனால் நீதிதியை நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவர் சுதந்திரமாக யாருடைய ஆலோசனையும் இன்றி செயல்படுகிறார். அவர் மத்திய மாநில அல்லது மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களை எவ்வித பாரபட்சமும் இல்லாமல் தீர்த்துவைக்கிறார். 
  • நிலப்பரப்பு – பூகோள அமைப்பு:-

சமஷ்டி அரசில் வாழ விரும்பும் அரசுகள் நிலப்பரப்பு, பூகோள அமைப்பில் தொடர்ச்சியாக இயங்கும். அத்தகைய தொடர்ச்சி அமைவதன் மூலம் அரசின் பாதுகாப்பு திறமையாக இருக்கும். தங்கள் தனித்தன்மையை பாதுகாக்க மத்திய அரசிடம் சில கோரிக்கைகளை பெற்றுப் பாதுகாக்கலாம். 
  • இரண்டாம் மன்றம்:-

மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் பொருட்டு அணைத்து மாநிலங்களிலிருந்து அம்மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். இது சமஷ்டியில் முக்கிய அம்சமாகும். 
  • அரசியல் அமைப்பை திருத்தம் செய்தல்:-

சமஷ்டி அரசியல் அமைப்பில் யாப்பை திருத்தம் செய்ய வேண்டுமானால் மத்திய மாநில அரசுகள் இரண்டினதும் அனுமதி வேண்டும்.

இவ்வாறாக இந்திய அரசியல் அமைப்பானது சமஷ்டிக்கான அணைத்து பண்புகளைக் கொண்டிருந்த போதிலும் அதனை சமஷ்டி என்று ஏற்றுக்கொள்வதில் சில குறைபாடுகள் காணப்படவருகின்றது. இது மத்திய அரசை வலுப்பெறச்செய்தும் மாநில அரசை நலிவடையச் செய்வதாகவும் உள்ளது. இவ்வாறாக முழு சமஷ்டியை ஏற்படுத்துவதில் காணப்படும் குறைபாடுகளாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்தலாம்.
  •  அதிகாரப் பங்கீடு:-

சமஷ்டி பங்கீட்டில் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் என்று பிரிக்கப்பட்டு இருந்தாலும் மத்திய அரசிற்கு அளிக்கப்பட்ட 97 துறைகளும் வலிமையையும் அதிக அதிகாரமும் பெற்று நாட்டை கட்டுப்படுத்துவனவாக உள்ளன. அதனால் மாநிலங்கள் மத்திய அரசின் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவும், அடிமைகளாகவும் இருக்க வேண்டியுள்ளது. எந்த மாநிலமும் பாதுகாப்பிற்காக மத்திய அரசின் படைபலத்தையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.
  •  சட்டமியற்றும் அதிகாரம்:-

சில துறைகளில் மத்திய, மாநிலங்கள் இரண்டும் சட்டமியற்றினால் அவற்றில் மத்திய அரசின் சட்டமே ஏற்றுக்கொள்ளப்படும்; மாநிலச் சட்டம் புறக்கணிக்கப்படும் அது போல குறிப்பிட்டுச் சொல்லாமல் விடப்பட்ட அதிகாரங்களும் (Residuary Powers) மத்திய அரசிற்கே தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் சட்டமியற்றும் உயர் அதிகாரத்தை நோக்குவோமாயின்,

Ø  அரசியலமைப்பின் 25வது சரத்துப்படி மாநிலத்தின் சட்டத்திற்கு கவர்ணரின் அனுமதி அவசியம் ஆகும். சட்டமூலம் அங்கீகரிக்கப்படுவதற்கு கால வரையறை இல்லை. இந்தியாவில் 1977-1985 வரை 1130 மாநில சட்டமூலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Ø  கவர்ணர் மத்திய அரசின் முகவராக தொழிற்படுவதோடு, 256வது சரத்து பாராளுமன்றத்தின் சட்டத்தின் படிதான் மாநிலத்தின் நிர்வாகம் நடைபெற வேண்டும்.
Ø  355வது சரத்தின் படி மாநிலத்தில் உள்ளக கிளர்ச்சி இடம்பெறுமாயின் மாநிலத்தின் முழு அதிகாரமும் மத்திய அரசிற்கு வரும், மாநிலத்தை கலைக்கவும் முடியும்.
Ø  360வது சரத்து மாநிலத்தை மத்திய அரசு நேரடி ஆட்சி செய்யலாம்.

Grand will Austin குறிப்பிடுகையில் “மாநிலங்கள் அவைக்கு பிரதமரின் சட்டரீதியான வீட்டோ               அதிகாரத்தை எதிர்க்க அல்லது நீக்க உரிமை இல்லை என்கிறார். இது மட்டுமின்றி இன்னும் பல அதிகாரமும் உண்டு.
  •   ராஜ்ய சபை உறுப்பினர்கள்:-

மத்தியப் பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையில் மாநிலங்களின் பரப்பு, மக்கள் தொகை போன்றவற்றை கருதாது சம பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். அதுவே சமஷ்டியின் பண்பு. உதாரணமாக அமெரிக்க செனட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரு இடங்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் மக்களின் எண்ணிக்கையின் கணக்கெடுப்பிலேயே ராஜ்ய சபையில் பிரதிநிதித்துவம் தரப்படுகிறது. மேலும் மத்திய அரசு விருப்பப்படும் பன்னிரண்டு நபர்களை குடியரசுத்தலைவர் நியமனம் செய்யலாம் என்ற ஏற்பாடு மக்களாட்சிக்கு மட்டுமன்றி சமஷ்டிக்கும் முரணானது ஆகும்.
  • அரசியலமைப்பை திருத்துதல்:-

இந்திய அரசியலமைப்பு நெகிழும் தன்மை உடையது. மத்திய, மாநில அரசுகளின் ஆதரவுடன் அரசியலமைப்பு திருத்தப்படும். இது சமஷ்டியின் பண்பு, அனால் இந்திய அரசியலமைப்பை திருத்துவதில் மாநிலங்களுக்கு முழுப்பங்கு கிடையாது என்பதை இங்கு குறிப்பிடலாம். ஒரு சில பகுதிகளுக்கே மாநிலங்களின் ஒப்புதல் கேட்கப்படுகிறது. மேலும் அரசியலமைப்பு மாற்றத்தையும் மாநிலம் கொண்டுவராது.
1951-1995 வரையான காலத்தில் 95 தடவை மாநில சுயாட்சியை மத்திய அரசு மீறியுள்ளது என அறிக்கைகள் கூறுகிறது.  
  • ஒற்றையாட்சிப் பண்புகள்:-

இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபை அமைப்பு சமஸ்டியை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பை உருவாக்கியுள்ளது என்றாலும் அது நடைமுறையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பாக காணப்படுகிறது. அதிகாரங்கள் அனைத்தும் பாராளுமன்றத்திற்கே கொடுக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் பெரும் அதிகாரங்கள் அதிகாரங்களே அல்ல என்று P.T சாக்கோ கருதுகிறார்.
H.V கெமத் “இந்திய சமஷ்டி பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு உட்பட்ட மத்திய மயப்படுத்தப்பட்ட   சமஷ்டி” (Central Oriented Federalism) என்கிறார். “அதிகாரங்களைப் பன்முகப்படுத்த ஓர் ஒருமுக அரசாக இந்தியா அரசியலமைப்பின் கீழ் விளங்குகிறதேதவிர, ஒரு சமஷ்டி அரசாக காணப்படவில்லை” என B.M குப்தா குறிப்பிடுகிறார்.
மாநிலங்கள் ஒன்று மத்திய அரசுடன் சேர்ந்துகொள்ள உரிமை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு பொதுநலம் கருதாது பாரபட்சமாக செயற்பட்டாலும் மாநிலங்கள் பிரிந்து செல்லும் உரிமை இல்லை. இதனை ஒற்றையாட்சி என்றே துணிந்து கூறலாம். முந்தைய சோவியத் யூனியனில் பிரிந்து செல்லும் உரிமை காணப்பட்டது.
  • பிரிவினை அதிகாரம்:-

ஒரு மாநிலத்தின் குறையைக்கருதி அம்மாநிலத்தை மற்றொரு மாநிலத்தின் எல்லையில் இருந்து விரிவுபடுத்தி அமைக்கலாம் என்று இந்திய அரசியலமைப்பு தெளிவுபடுத்துகிறது. இதனால் ஒரு மாநிலம் வளர்ச்சியடைய, மற்றொரு மாநிலம் பாதிக்கப்படுகிறது. உதாரணமாக 1966இல் பஞ்சாப் மாநிலம் பிரிக்கப்பட்டது. அதுபோல 1985இல் ஹரியானா மாநிலம் பிரிக்கப்பட்டது. இன்று கர்நாடகாவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிய மத்திய அரசு ஆதரவு தெரிவிக்கின்றமை, இத்தகைய பிரிவினை உக்தியால் இந்தியாவின் ஒற்றுமை குறைய வழியுண்டு. ஆனால் அமெரிக்க அரசியலமைப்புப்படி இத்தகைய உரிமை மத்திய அரசிற்குக் கிடையாது.
மேலும் மாநிலத்தின் எல்லையை மாற்றியமைக்கும் அதிகாரமும் மத்திய அரசுக்கே உண்டு.
  •  மாநில ஆளுநர்:-

இந்திய அரசியல் அமைப்புப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு முதலமைச்சருடன் கூடிய அமைச்சரவை செயல்பட்டாலும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் மாநில அரசின் செயல்களைக் கவனிக்கிறார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்தால் மாநில சட்ட சபையைக் கலைக்கச் சொல்லும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. இவ்வாறு அதிக அதிகாரத்துடன் மத்திய அரசிற்கு கட்டுப்பட்டவராக மாநில ஆளுநர் செயட்பட்டாலும் அவரை எக்காரணமும் காட்டாமல் பதவியில் இருந்து நீக்கவோ, வேறு மாநிலத்திற்கு மாற்றவோ மத்திய அரசிற்கு அதிகாரம் உண்டு. பதவிக்காலம் முடியுமுன்பும் அவரை நீக்கலாம்.
356வது சரத்தின் படி கவர்ணரின் முறையீடு இன்றி மாநிலங்களை கலைக்கலாம் எனும் ஏற்பாடு ஓர் அரசியலமைப்பு பயங்கரவாதம் என V.R கிருஷ்ணா ஐயர் கூறுகின்றார். இது அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளில் கிடையாது. அங்கு மாநில மக்களே கவர்னரை தேர்ந்தெடுகின்றனர்.
  •  அவசரநிலைப் பிரகடனம்.

அவசர நிலையின் போது மத்திய அரசாங்கம் அதிகளவு அதிகாரத்தை அனுபவிக்க வருகின்றது. இக்காலத்தில் மத்திய அரசு
Ø  மத்திய, மாநிலத்திற்கு சட்டமியற்றலாம், மாநிலங்களை நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவரலாம்.
Ø  எல்லைப்புற மாநிலங்களில் ஏற்படும் கிளர்சிகளுக்கு இராணுவ பலத்தை பிரயோகித்து அடக்கலாம்.
அவசரநிலைப் பிரகடனத்தால் மாநிலங்கள் மிகவும் பதிக்கப்படுகின்றன. மாநில அரசின் வருவாய் ஜனாதிபதியின் வழிகாட்டலின் படியே செலவு செய்யப்பட வேண்டும் என்ற ஏற்பாடால் ஊழியரின் சம்பளம் குறைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் இந்திய அரசியல் அமைப்பு ஒற்றையாட்சிப் பண்புகளை அதிகம் கொண்டுள்ளது என்பதனை தெளிவாக விளக்குகின்றது.

முடிவுரை

இந்திய அரசியலமைப்பை உருவாக்கியோர் சமஷ்டி என்ற சொல்லை பயன்படுத்தாது Indian Union என்றே குறிப்பிட்டுள்ளனர். அறிஞர்களும் இதனை Administrative Federalism, Quasi Federalism, Territory Federalism, Prefect Federalism, Organic federalism, Guiding Federalism என பல பெயர்கொண்டு அழைக்கின்றனர். என்றாலும் இத்தகைய அதிகாரங்கள் மத்திய அரசிடம் ஏன் குவிந்துள்ளது எனப்பார்த்தால், இந்தியா பல மொழிகளைப் பேசும் நாடு பல இனங்களையும், கலாசாரங்களையும் கொண்ட நாடு சில தீய சுயநல சக்திகளுக்கு அவ்வப்பொழுது அடிமைப்பட்டு பிரிவினை கோரிக்கை ஏற்பட வழியுண்டு. அப்பிரிவினை மொழியின் அடிப்படையிலோ, இனத்தின் அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ ஏற்படலாம். இதனைத் தடுக்கவே இத்தனை வலிமைமிக்க சமஸ்டியை ஏற்படுத்தினர்.

1947இல் அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது நிலவிய குழப்பம் அதனால் உருவான சீர்குலைவு இவற்றால் மக்கள் பிளவுபடக்கூடும் என்றே மத்திய அரசுக்கு அரசியல் அமைப்பு அதிக முக்கியத்துவத்தை கொடுத்தது. சுதந்திரத்தின் பின் பல காலம் மத்திய அரசு வலிமைமிக்க நிலையில் அதிகாரத்தை பிரயோகித்தாலும் இன்று மத்திய அரசு மாநில அரசின் செல்வாக்கு, ஆதரவைப்பெற இன்று மாநிலத்திற்கு எதிரான சட்டத்தை இயற்றுவதை தவிர்த்து மத்திய அரசை பலப்படுத்தும் சட்டத்தையே பிறப்பிக்கின்றது. இதனால் முன்னரைவிட இன்று மாநிலங்கள் அதிக சுயாட்சித் தண்மையை அனுபவிக்கின்றன.

ஆனாலும் உலகில் எந்த சமஷ்டியிலும் காணப்படாத அளவு ஒற்றைப் பண்புகளைக்கொண்ட இந்த அரசியல் அமைப்பை சமஷ்டி அரசியல் அமைப்பு எனக்கூற முடியாதுள்ளது. அதனால் இந்திய அரசியல் அமைப்பு ஒற்றையா சமஷ்டியா என்ற வாதப்பிரதிவாதம் இன்றும் காணப்படுகிறது.


   ஆக்கம்:- 
   மீஸா பேகம்

Comments

Popular posts from this blog