வெளிநாட்டுக் கொள்கைகள் ஏன் அவசியம்?





சர்வதேச முறைமையில் எந்தவொரு அரசும் மற்றைய அரசுகளுடனான உறவின்றி தனித்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதனால் சர்வதேச சமூகத்தின் அரசுகளானது மற்றைய அரசுகளுடன் பல்வேறு விதமான உறவுகளைப் பேணி வருகின்றது. அவ்வாறே சகல அரசுக ளும் சர்வதேச நிகழ்வுகளில் உள்வாங் கப்படுவது தவிர்க்க முடியாததாகும். இத்தகைய உள்வாங்கலானது முறையானதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைகளுக்கும் உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இவ்வெதிர்பார்ப்பானது நாடுகள் வெளிநாட்டுக் கொள்கையி னைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தினை வெளிப்படுத்துவதுடன் நவீன அரசுகளின் முக்கிய பணிகளுள் ஒன்றாகவும் இவ்வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கம் நோக்கப்படும் நிலையினை யும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தெளிவாக வரையறுக்கப்பட்ட வெளிநாட்டுக் கொள்கை இன்றி எந்தவொரு நாடும் சர்வதேச முறைமையில் உரிய இடத்தினைப் பெற்றுக் கொள்ள முடியாது.
இத்தகைய தொரு பொதுவான பின்னணியில் ஒரு நாட்டிற்கு வெளிநாட்டுக் கொள்கை ஏன் அவசியமானது என்பதனைப் பற்றிப் பரிசீலிப்பதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். இந்நோக்கினை அடைவ தற்காக இக்கட்டுரையானது அரசும் சர்வதேச அரசியலும், வெளிநாட்டுக் கொள்கை என்றால் என்ன? வெளிநாட் டுக் கொள்கையினை நிர்ணயிக்கும் காரணிகள், வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கங்கள் என்பன பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
அரசும் சர்வதேச அரசியலும்
அரசுகள் கொண்டிருக்கும் வெளிநாட்டுக் கொள்கையின் அவசியம் பற்றி நோக்குவதற்கு முன்னர் சர்வதேச அரசியல் பரப்பில் அவ்வரசுகள் பெற்றுள்ள நிலையினைப் பற்றியும் அதன் பங்கிளைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது அவசிமானதாகும். இந்த வகையில் சர்வதேச அரசியலின் பிரதான செயற்பாட்டாளர்களாக அரசுகளே உள்ளன. அவை சர்வதேச முறையமையின் அடிப்படை அலகுகளாக உள்ளன. அண்மைக்காலமாக சர்வதேச அரசியலில் அழுத்தம் கொடுக்கப்பட்ட ஒரு விடயமாக இருந்தது. இந்நாடுகளுக்கிடையிலான அரசியல் பற்றிய ஆய்வும், உறவு பற்றிய ஆய்வுமாகும்.
எனினும் 2ம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் சர்வதேச அரசியல் பரப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கள் போன்ற புதிய செயற்பாட்டளார்களை அறிமுகம் செய்ததது. இச்செயற்பாட்டாளர்கள் அரசுசாரா செயற்பாட்டாளர்கள் என அறியப்படுகின்றனர். இவ்வாறான அரசுசாராத செயற்பாட்டாளர்கள் பல தோற்றம் பெற்றுள்ள போதிலும் சர்வதேச அரசியல் பரப்பில் அரசுகள் தமது ஆதிக்கத்தினை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது.
சமகாலத்தில் சர்வதேச அரசியல் பரப்பில் அரசுகள் சுதந்திரமானதும், இறையமையுடையவையாகவும் கருதப்படுகின்றது. இதன்படி தற்போதைய உலக முறைமையானது சுதந்திரமும் இறைமையும் உடைய சுமார் 200 தேசிய அரசுகளைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி பால்மர் மற்றும் பேர்க்கின்ஸ் ஆகியோர் குறிப்பிடும் போது, “அரச முறைமையானது வேறுபட்ட அளவில், வேறுபட்ட வழிகளில் ஒருவரோடு ஒருவர் ஊடாட்டம் செய்யத்தக்க மக்கள் இறைமையுடைய அரசுக்குள் தனியாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் அரசியல் வாழ்க்கையின் மாதிரியாக உள்ளது” எனக்கின்றனர்.
தற்போதைய தேசிய அரச முறைமையானது 16ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்ததது வந்துள்ளது. இதிலிருந்தே அரசுகள் சர்வதேச அரசியலில் ஆதிக்கமுடைய சக்திகளாக மாறிவந்தன. சமகால சர்வதேச அரசியலின் இயக்கம் சக்திகளாக இருக்கின்ற தேசியவாதம், இறைமை, வெளிநாட்டுக் கொள்கை, இராஜதந்திரம், தேசிய அதிகாரம், அதிகாரச் சமனிலை, கூட்டுப் பாதுகாப்பு, யுத்தம், சர்வதேச சட்டம், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் அவை அரசுகளோடு கொண்டுள்ள நெருக்கமான உறவு ஆகியவற்றினைக் கருத்தில் எடுக்கும் போது இது உண்மையாகின்றது. இதன்படி இத்தேசிய அரசுகளே சர்வதேச அரசியலுக்கும் அதன் வழியிலான சர்வதேச உறவுக்குமான அடிப்படையினை வழங்குகின்றது. சர்வதேச அரசியல் முறைமையில் இத்தகைய அரசுகள் கொண்டிருக்கும் அடிப்படையான பண்புகளாக பின்வருவன சுட்டிக்காட்டப்படுகின்றது.
1. அரசுகள் சர்வதேச அரசியலில் தனியுடமையானவை
2. அரசுகள் சர்வதேச அரசியலின் செயற்பாட்டுப் பகுதிகள்
3. சர்வதேச அரசியலில் அரசுகள் சுதந்திரமானவை
4. அரசுகள் சர்வதேச அரசியல் வகிபாகத்தினைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை
5. சர்வதேச அரசியலில் அரசுகள் வேறுபட்ட தன்மையினைக் கொண்டவை.
சர்வதேச அரசியல் பரப்பில் மேற்படி அடிப்படையான தன்மையினைக் கொண்டிருக்கும் அரசுகள் சர்வதேச உறவின் பிரதான பங்குதாரர்களாக இருக்கின்றன. சர்வதேச அரசியலில் அரசுகள் மற்றைய அரசுகளுடன் ஊடாட்டத்தில் ஈடுபடுகின்ற போது தமது தேசிய இலக்குகளை அடைந்து கொள்வதற்கான அதிகாரப் போராட்டத்தில் ஈடுபடுகின்றது. இவையே அரசுகளின் வெளிவாரி நோக்கங்கள் அல்லது தேசிய நலன்கள் என அழைக்கப்படுகின்றது. இதன்படி சர்வதேச உறவுகளில் ஈடுபடும் அரசுகள் பின்வரும் ஐந்து வகையான தேசிய நோக்கங்களைக் கொண்டுள்ளன.
1. தேசியப் பாதுகாப்பு: இது அரசியல் சுதந்திரத்தினைப் பாதுகாத்தல், ஆட்புல ஒருமைப்பாட்டினைப் பேணுதல், அரசின் பெளதீக இருத்தலினைப் பாதுகாத்தல் என்பவற்றினைக் குறிக்கின்றது.
2. தேசியப் பொருளாதார மேம்பாடு: இது தேசத்தின் பொருளாதாரத்தினை விருத்தியுறச் செய்வதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளினைக் குறிக்கின்றது.
3. தேசியப் பொதுநல மேம்பாடு: தேசிய பொது நலனை முன்னேற்றுவதற்கு அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் இதனுள் உள்ளடக்கப்படுகின்றது.
4. தேசிய கெளரவத்தினைப் பாதுகாத்தல்: சர்வதேச முறைமையில் அரசுகள் உறவு கொள்ளும் போது அதன் கெளரவத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்து கொள்ளும் விதத்தினைக் குறிக்கின்றது.
5. தேசியக் கருத்தியலினைப் பாதுகாத்தல்: தேசியப் பொருளாதாரத்தினையும் தேசியப் பொது நலனையும் மேம்படுத்துவதற்கு அவசியமான மிகச் சிறந்த கொள்கை என அரசுகள் ஏற்றுக் கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதாரக் கருத்தியலினை இது குறிக்கின்றது.
சர்வதேச அரசியலில் மேற்கூறிய தேசிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக அரசுகள் பின்வரும் வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றது.
1. வெளிநாட்டுக் கொள்கையும் இராஜதந்திரமும்
சர்வதேச அரசியல் பரப்பில் அரசுகள் மற்றைய அரசுகளுடன் உறவினை மேற்கொள்ளும் போது வெளிநாட்டுக் கொள்கை மிகவும் இன்றியமையாததாகக் கொள்ளப்படுகின்றது. இவ்வெளிநாட்டுக் கொள்கையின்றி எந்தவொரு அரசும் சர்வதேச மட்டத்தில் இயங்க முடியாது. இவ்வெளிநாட்டுக் கொள்கையின் மூலம் அரசுகள் தாம் எதிர்பார்ப்பவற்றை அரசுகளுக்கிடையிலான உறவுகளின் ஊடாக அடைந்து கொள்வதற்கே எதிர்பார்க்கின்றது. இதன் போது அரசுகள் கொண்டிருக்கும் நோக்கங்கள் என்பது அரசியல், பொருளாதார, இராணுவ, வர்த்தக, கலாசார அடிப்படையிலானதாக இருக்கலாம். இத்தகைய வெளிநாட்டுக் கொள்கையினை அமுல்படுத்துவதற்கான பிரதான வழிமுறையாக இராஜதந்திரம் உள்ளது. இவ்ராஜதந்திரம் அடிப்படையில் பேச்சுவார்த்தையினைத் தழுவியதாகும்.
2. பொருளாதார அதிகாரம்
அரசுகள் சர்வதேச உறவுகளின் போது வெளிநாட்டுக் கொள்கையினை உபயோகிக்கப்பதற்காகப் பயன்படுத்தும் இரண்டாவது கருவி பொருளாதார அதிகாரமாகும். இத்தகைய பொருளாதார அதிகாரமானது நன்கொடை அல்லது வெகுமதி மற்றும் தண்டனை என்ற அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றது.
3. ஊடுருவலும் தலையீடு செய்தலும்
அரசுகள் வெளிநாட்டுக் கொள்கையினை அமுல்படுத்துவதற்குப் பயன்படுத்தும் மூன்றாவது வழிமுறை ஊடுருவலும் தலையீடு செய்தலுமாகும். இவ்வழிமுறையானது புலனாய்வு வழிமுறைகள், இரகசியச் சேவைகள், பிரசாரம் மற்றும் பிற மறைமுக உத்திகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. ஊடுருவலினை அல்லது தலையீட்டினை மேற்கொள்ளும் அரசகளுக்குச் சாதகமான நடத்தையினை தலையீட்டுக்கு உள்ளாகும் அரசுகளிடமிருந்து எதிர்பார்க்கும் முகமாகவே இம்முறை பயன்படுத்தப்படுகின்றது.
4. யுத்தம்
அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கையினை அமுல்படுத்துவதற்கு மேற்கூறிய வழிமுறைகள் எதுவும் பயனளிக்காத பட்சத்தில் இறுதி வழிமுறையாக யுத்தம் உபயோகிக்கப்படுகின்றது. வெளிநாட்டுக் கொள்கையினை அமுல்படுத்துவதில் மிகவும் செலவு கூடிய, அழிவுமிக்க வழிமுறையே யுத்தமாகும். இந்த யுத்தத்தின் நோக்கம் எதிரியினை முழுமையாகத் தோற்கடிப்பது அல்லது பலவீனப்படுத்துவதாகும்.
மேலும் அரசுகள் சர்வதேச உறவுகளினை மேற்கொள்ளும் போது அவற்றின் வெளி நடத்தையினைக் கட்டுப்படுத்தக் கூடிய விதத்தில் பல வழிமுறைகள் சர்வதேச அரசியலில் காணப்படுகின்றது. அவை வருமாறு,
1. அதிகார வலுச் சமனிலை
2. கூட்டுப்பாதுகாப்பு
3. சர்வதேச சட்டம்
4. ஆயுதப் பரிகரணமும் ஆயுதக் கட்டுப்பாடும்
5. உலகப் பொதுஜன அபிப்பிராயம்
6. உலக அரசாங்கம்
மேற்கூறிய விளக்கங்களிலிருந்து நோக்கும் போது சர்வதேச அரசியல் பரப்பில் அரசுகள் மற்றைய நாடுகளுடனான உறவில் கூடிய கவனம் செலுத்துகின்றமையினை அவதானிக்கலாம். அதற்கான வழிமுறைகள் பல சர்வதேச அரசியல் பரப்பில் காணப்படுவதானது இதனை நிரூபணம் செய்கின்றது. இந்த வகையில் இவ்விதமான உறவுகளை அரசுகள் மேற்கொள்ளும் போது அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கையே அதற்கான வழிகாட்டலினை வழங்குகின்றது எனலாம்.
வெளிநாட்டுக் கொள்கை பொருள் விளக்கம்
வெளிநாட்டுக் கொள்கை என்றால் என்ன என்பது பற்றி சகலராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பொதுவான வரைவிலக்கணம் காணப்படுவதில்லை. ஏனெனில் வெளிநாட்டுக் கொள்கையினைப் பற்றி விளக்க வந்த ஒவ்வொரு அறிஞர்களும் அதனை வரைவிலக்கணக்கப்படுத்துவதிலும் அது குறித்த அம்சங்களில் அழுத்தம் கொடுப்பதிலும் வேறுபட்டு நிற்கின்றனர். இருந்தபோதிலும் ஒருநாட்டின் வெளிநாட்டுக் கொள்கை அந்த நாட்டின் தேசிய நலனை முன்னேற்றுவதை நோக்காகக் கொண்டுள்ளது. என்ற விடயத்தில் இவ்வறிஞர்கள் ஒத்துநிற்பதாக பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா குறிப்பிடுகின்றார்.
பொதுவாக நாடுகளிடின் வெளி நடத்தைகளை வெளிப்படுத்தப்படுவதே வெளிநாட்டுக் கொள்கை எனக் கருதப்படுகின்றது. இவ்வெளிநாட்டுக் கொள்கையானது சர்வதேச அரசியல் செயன்முறையினை இயக்கும் கொள்கைகளுள் ஒன்றாக நோக்கப்படுகின்றது. வேறுவகையில் கூறுவதாயின் ஒரு நாடு பிற நாடுகளுடன் தேசிய அளவில் தன்னுடைய வளத்திற்கும் நலனுக்கும் உகந்த வகையில் பின்பற்றி நடக்கும் கொள்கைகளையே வெளிநாட்டுக் கொள்கை என்பது குறித்து நிற்கின்றது. எனினும் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான ஒரு கோட்பாட்டு ரீதியான விளக்கத்தினைப் பின்வரும் வரைவிலக்கணங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
ஜோர்ஜ் மொடல்ஸ்கி என்பவர் வெளிநாட்டுக் கொள்கையினை வரைவிலக்கணப்படுத்தும் போது, “பன்னாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது செயற்பாடுகளை செய்து கொள்வதும் பிறநாடுகளின் நடத்தையினை அதற்கு ஏற்ப மாற்றம் பெறச் செய்ய உருவாக்கிக் கொள்ளும் கொள்கைகளே வெளிநாட்டுக் கொள்கை” என்கிறார்.
இவ்வரைவிலக்கணத்தில் பிறநாடுகளின் செயற்பாடுகளை அல்லது நடத்தையினை ஒரு அரசின் நலன்களுக்கு ஏற்ப மாற்றம் பெறச் செய்வதுதான் வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கம் என மாடல்ஸ்கி குறிப்பிட வருவதிலிருந்து நடத்தையில் மாற்றத்தினை ஏற்படுத்தும் நோக்கினைக் கொண்ட கொள்கைப் பகுதியிலேயே மொடல்ஸ்கி கவனம் செலுத்தி இருப்பது புலப்படுகின்றது.
கியு ஜிப்சன் குறிப்பிடும் போது, “உலகின் மற்றைய பகுதிகளோடு ஓர் அரசாங்கத்தின் தொடர்புகளை இணைத்து நடாத்துவதற்காக திட்டவட்டமான அறிவு, அரசியல் அனுபவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படும் விரிவான திட்டமே வெளிநாட்டுக் கொள்கையாகும். அது அந்நாட்டின் நலனைப் பேணுவதையும் பாதுகாப்பதையும் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்” எனக் குறிப்பிடுகின்றார்.
பெலிக்ஸ் குரோஸ் குறிப்பிடும் போது, “வெளிநாட்டுக் கொள்கையானது சில சூழ்நிலைகளில் நாடுகளுக்கிடையிலான /சிவினை இல்லாமல் செய்துவிடும்” என்கிறார். அதாவது ஒரு அரசு சில நாடுகளுடன் உறவுகளை மேற்கொள்வதில்லை எனத் தீர்மானித்தால் அதுவும் வெளிநாட்டுக் கொள்கையாக அமைந்துவிடுகின்றது என்கிறார். 
நன்றி : ஏ.எம்.எம். பெளசர் 
விரிவுரையாளர்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

Comments

Popular posts from this blog