Consociational Democracy

நட்புறவு ஜனநாயகம்



இன ரீதியான அணிதிரழ்வு மற்றும் மோதல்கள் ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல ஆனால் சமகால உலகில் அதன் தீவிரம், வளர்ச்சி என்பன இது பற்றய ஆய்வுகளை மேற்கொள்ள அறிஞர்களைத் தூண்டியது. தேசிய அரசுகளின் பெரும்பான்மை பல்வேறு காரணங்களால் வேறுபடுவதானது உலக இடப்பெயர்வு, இனமோதல்களை உருவாக்குகின்றது. இதனால் அரசியல் பதட்டம் இன்று அதிகரித்த நிலையைக் காணலாம்.

இனத்துவம் பற்றிய பூகோள வெளிப்பாடனது சமூகவிஞ்ஞானிகளின் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது. தற்கால உலக சூழ்நிலையில் பல நம்பிக்கைகள் உள்ள சமூகத்தின் பன்மைத்துவத்தையும், அதன் நலனையும்  மேலாண்மை செய்வது பற்றி கோட்பாட்டு ரீதியிலும், நடைமுறை ரீதியிலும் ஆராய்வது முக்கியமான ஒரு விடயமாகும்.
வளர்முக நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மையானது இனமோதலினால் பாதிப்புக்கு உள்ளாகின்றது. இந்நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் படி இங்கு அரசியல் நிறுவனங்களுக்கும் இன அணிதிரழ்வுக்கும் இடையே தொடர்புகள் காணப்பட்டது. இதனால் இந்த பன்மைத்துவத்தை கையாள இந்த Multy ethnic sates  அதிகாரத்தை பகிர்வு செய்கின்றன. இந்த பன்மைத்துவம் பற்றிய பிரச்சினையை உலக நாடுகள் வெவேறு வழிகளில் அணுகியது. ஐரோப்பிய நாடுகளில் இந்த பன்மைத்துவம் நட்புறவு ஜனநாயகத்தின் மூலம் (consociationalism) அணுகப்பட்டது. இதனால் நட்புறவு ஜனநாயகம் பற்றிய கருத்துக்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. நட்புறவு ஜனநாயகம் பற்றிய வளர்ச்சிக்கு Arend lijphart மற்றும் பிற விஞ்ஞானிகளும் உதவியுள்ளனர். இந்த வகையில் நட்புறவு ஜனநாயகம் ஆனது 
 
1.        பாரிய பாராளுமன்ற கூட்டணி (Grand Coalition )
2.        பிராந்திய சுயாட்சி (Segmental Autonomy)
3.        சமபங்கு வகித்தல்  (proportionality)
4.        பரஸ்பர இரத்ததிகாரம்  ( Mutual Veto)
இந்தப் பண்புகள் நட்புறவு ஜனநாயக மாதிரியில் பல்வேறு கோணங்களில் ஆராயப்படுகின்றன.

Consociationalism (நட்புறவு ஜனநாயகம்)

Consociation அல்லது Consociationalism எனும் வார்த்தைப் பிரயோகம் consociatio என்ற வார்த்தையில் இருந்து பிரிந்து வந்த ஒன்றாகும். 1603இல் இது Political union ஐ குறிக்க பயன்படுத்தப்பட்டது. அதன் பின் Consociationalism எனும் பிரயோகம் 1960களின் பின் அரசியல் அறிஞர்களால் விசேடமாக Arend lijphart இனால் மேற்கு ஐரோப்பாவில் அரசியல் நிலைப்பாட்டிற்காக சிதறிய சமூகங்களிடையே குறைந்தளவில் அதிகாரத்தை பகிர்வதற்கு இவ்வார்த்தையை பிரயோகித்தார் (Clark & Foweraker, 2001, pp.91-92). Consociationalism என்பதன் நிச்சயமான பொருள் சமமானவர்ககளுக்கு இடையே நட்புறவு (association between equals) ஆகும். வேறுபட்ட கலாசரங்கள், அடையாளங்கள், இனக்குழுக்கள் என்பன நட்புரீதியிலும், சமத்துவத்திலும் அரசியலில் தொடர்பு கொள்வதை இது குறிக்கும்.

இனக்குழுக்கள் அவர்களின் அனைத்து செயற்பாடுகளிலும் சுதந்திரமாக இருப்பதோடு பன்மைத்துவ அரசியலில் சமமான பங்கெடுப்பு தமக்கு கிடைக்கிறது என அவர்கள் மனதளவில் ஏற்பதே இந்த முறை ஆகும். அவர்கள் அரசியல் ரீதியில் ஒழுங்கமைக்கப்படுவதோடு அரசியல் பிரதிநிதித்துவமும் சமரீதியில் கிடைக்கப்பெற வேண்டும். ஒவ்வொரு இனக்குழுவிலும் உள்ள உயரடுக்கினரை ஒன்றினைத்து ஒரு தேசிய அமைப்பாக உருவாக்கி அவர்கள் அரசியல் பிரம் பேசுவதையே இது குறிக்கின்றது.

நட்புறவு ஜனநாயகக் கோட்பாட்டின் வளர்ச்சி

வேறுபட்ட சமூகத்தில் வேறுபட்ட இனக்குழுக்களைக் கொண்ட ஒரு நாட்டில் அரசியல் உடன்பாட்டை ஏற்படுதல் என்பது வல்லமையான ஜனநாயகத்திற்கு சவாலாக உள்ள ஒரு அம்சம் ஆகும் பல அரசியல் அறிஞர்கள் பன்மைத்துவ சமூகத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஒரு அவநம்பிக்கையையே கொண்டுள்ளனர். வேறுபட்ட தேசியவாதத்தை கொண்ட நாடுகளில் சுதந்திரமான நிறுவங்களை ஏற்படுத்துவது சாத்தியமற்ற ஒன்றாகும்.

பன்மைத்துவ சமூகத்தில் ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அரசியல் விஞ்ஞானிகள் பல்வேறு கோட்பாடுகளை உருவாக்கத் தலைப்பட்டனர். அதில் Lijphart இன் ஜனநாயக அமைப்பு பற்றிய வகைப்பாடு 1960 இன் பின் வந்தது. இது நடைமுறை ரீதியிலும், அரசியல் கோட்பாட்டு அடிப்படையிலும் தத்துவார்த்த சுதந்திரத்தைக் கொண்டு காணப்பட்டது.
இதனோடு “overlapping membership theory”,“numbers of parties theory”, “functionalist model of Almond and Powel” என்பன போன்ற கோட்பாடுகள் ஜனநாயக உறுதிப்பாட்டுக்காக பரிந்துரைக்கப்பட்டது.

Lijphart நட்புறவு ஜனநாயகத்தின் நான்கு பண்புகளை கூறுகின்றார். அவை
1.        ஒரு பன்மைத்துவ சமூகத்தில் அணைத்து முக்கிய பகுதிகளில் இருந்தும் இணைக்கப்பட்ட அரசியல் தலைவர்களைக் கொண்ட பாரிய பாராளுமன்றக் கூட்டணி.
2.        பரஸ்பர இரத்ததிகாரம் அல்லது உடன்பாடான பெரும்பான்மை. து சிறுபான்மை நலன்களுக்கு கூடிய அளவில் பாதுகாப்பைத்தரும்.
3.        சரிசமமான அரசியல் பிரதிநிதித்துவம், சிவில் சேவை நியமனங்கள், பொது நீதி ஒதுக்கீடு.
4.        ஒவ்வொரு பிரிவுகளும் தமது உள் விவகாரங்களை இயக்கக்கூடியளவு உயர் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படல். என்பவை ஆகும்.
இவற்றை இனி விரிவாக ஆராய்வோம்.

பாரிய கூட்டணி (Grand Coalition or Executive Power sharing)

நட்புறவு ஜனநாயகத்தின் முதல் பண்பு அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும் கொண்ட ஒரு கூட்டணி ஆகும். இந்தக் கூட்டணியானது சமூகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் நிறைவேற்று அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் ஒரு சாதனமாகக் காணப்படுகிறது. எனவேதான் Lijphart பாரிய கூட்டணி ஊடாக நிர்வாக அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்தினார். Lijphart இன் பாரிய கூட்டணியானது நட்புறவு ஜனநாயகத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றது. இதனால் அவருடைய பாரிய கூட்டணி catch-all conceptதத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டு காணப்படுகிறது.

இலகுவாகக் கூறினால் பாரிய கூட்டணியானது பாராளுமன்ற அமைப்பின் அமைச்சரவையில் பல இனம், மொழி, சமயத்தலைவர்கள் இணைந்த அமைப்பையே இது குறிக்கும். இதற்கு பெல்ஜியம், மலேசியா என்பன உதாரணமாகும். இங்கு பாராளுமன்ற பாரிய கூட்டணியில் அமைச்சரவையானது நட்புறவு ஜனநாயக அமைப்பில் செயற்படுகிறது. நட்புறவு ஜனநாயகத்தில் அதிகாரப்பகிர்வு ஏற்பாடானது பாராளுமன்ற முறையினைப் போல வரையறுக்கப்பட்டது அல்ல. இதற்கு Swiss federal executive body ஒரு சிறந்த உதாரணமாகும். இங்கு federal council ஆனது அனைத்து முக்கிய மொழிகள், மதங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கிறது. லெபனானில் நட்புறவு ஜனநாயகம் அமுலில் இருந்த போது   (1943-1975) அங்கு பல்வேறு இனங்களுக்கு இடையில் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகள் பகிந்தளிக்கப்பட்டது. ஜனாதிபதித்துவம் கிறிஸ்தவர்களுக்கும், பிரதமர் பதவி சுன்னத் முஸ்லிம்களுக்கும், சபாநாயகர் பதவி ஷியா முஸ்லிம்களுக்கும் உப சபாநாயகர் பதவி Greek Orthodox சமூகத்திற்கும் வழங்கப்பட்டது.

பிராந்திய சுயாட்சி

நட்புறவு ஜனநாயகத்தின் அடுத்த முக்கிய பண்பு segmental or group autonomy ஆகும். குழு சுயாட்சி என்பது தமது சொந்த உள் விவகாரங்களையும் விசேடமாக கல்வி மற்றும் கலாசாரங்களை இயக்குவதற்கான குழு அதிகாரத்தையே இது குறிக்கிறது. Lijphart வரையறுத்த சுயாட்சி பல்வேறு சந்தர்ப்பத்தில் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றது. சுயாட்சியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மூன்று வகைகளில் காணப்படுகிறது அவை மத மற்றும் மொழி ரீதியிலான அதிகாரப் பகிர்வைக் கொண்டு காணப்படுகிறது.

1.  மொழிரீதியிலான இந்த சுயாட்சி சமஷ்டி யாப்பின் அடிப்படையில் Switzerland, Belgium, Czechoslovakia வில் வழங்கப்படுகிறது.
2.       சிறுபான்மையினர் தமது சுயாட்சிப் பிரதேசத்தில் பாடசாலைகளை நிறுவுவதட்கும் அதனை இயக்குவதற்குத் தேவையான நிதியை அரசாங்கம் வழங்குவதையும் Belgium மற்றும் Netherland இல் காணலாம்.
3.     சிறுபான்மையினரின் குடும்பம் தொடர்பிலான விடயங்கள் அதாவது திருமணம், விவாகரத்து, பிறப்புரிமை என்பவற்றை தீர்ப்பதற்கு தேவையான  separate personal laws லெபனான், சைப்ரஸ் இல் காணப்படுகிறது.

Segmental or group autonomy இரண்டு வடிவங்களைக் கொண்டுள்ளது. அவை territorial and non-territorial வடிவமாகும் . Lijphart இன் கருத்தின் படி சமஷ்டி என்பது territorial autonomy வழங்குவதற்கான சிறந்த வழி என்கிறார். இதற்கு பல்வேறு இனக்குழுக்களின் எல்லையானது புவியியல் ரீதியில் ஒன்றாக இணைந்திருக்கும் பட்சத்தில் சாத்தியமாகும்.  இனக்குழுக்கள் புவியியல் ரீதியில் கலைந்து கலவனாக இருக்குமானால் அவர்களுக்கு non-territorial autonomy ஏற்புடையது ஆகும். 1960 சைப்ரஸ் யாப்பானது கிரேக்க சைபீரியர்களுக்கும், துருக்கிய சைபீரியர்களுக்கும் சட்ட ரீதியில் மதம் மற்றும் கல்வி தொடர்பான விடயங்களைக் கையாள தனிப்பட்ட அதிகாரங்களை வழங்கின  .

territorial and non-territorial இணைந்த சுயாட்சி பெல்ஜியத்தில் பயன்படுத்தப்பட்டது. பெல்ஜிய அரசியல் யாப்பானது இன ரீதியில் ஓத்த தன்மையுள்ள Dutch பேசும் Flanders மற்றும் French பேசும் Wallonia சமூகங்களுக்கு தமது புவியியல் எல்லைக்குள் அரசியல் அதிகாரத்தை வழங்கியது. கனடாவில் Segmental autonomy விசேடமாக தெரிவு செய்யப்பட்ட குழுக்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகிறது. இங்கு சில மொழி மற்றும் சமய ரீதியான குழுக்கள் தமது பிராந்தியக் கல்வி தொடர்பில் சுயாட்சியை அனுபவிக்கின்றது. 

McCulloch என்பவர்  கூறுகையில் சில மொழியியல் குழுக்கள் (French பேசும் சமூகங்கள்) தமது மொழியை அடிப்படையாகக்கொண்டு பாடசாலைகளை அமைப்பதோடு தேவை ஏற்படில் மத ரீதியிலான பாடசாலைகளை பொதுமக்கள் உதவியோடு உருவாக்க முடியும் (for example Catholic in Ontario). Assaf  இவர் பிராந்திய சுயாட்சி பற்றிய தெளிவின்மை பற்றி விளக்க முற்படுகின்றார்.

Proportionality (சமபங்கு வகித்தல்)

அரசியல் நிறுவங்களில் பிரதிநிதித்துவதையும், வளங்களையும் பகிருதல், வேலை வாய்ப்புக்கள் ஒதுக்கீடு என்பன சமவிகிதத்தில் வழங்கப்படுவதை இது குறிக்கின்றது. சமூகத்தில் அணைத்து பிரிவுகளில் உள்ளவர்களையும் அதிகாரக் கட்டமைப்பில் இணைப்பதை இது குறிக்கும். பிரிக்கப்பட்ட அல்லது பன்மைத்துவ சமூகத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான சரியான தேர்தல் முறையாக விகிதாசாரப் பிரதிநிதித்துவம் (proportional representation) காணப்படுகிறது என Lijphart கூறுகின்றார். ஏனெனில் இதில் சிறுபான்மைக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதோடு இன, மத, இனத்துவ குழுக்களையும் உள்ளடக்கி முற்றிலும் சமத்துவமான வாய்ப்பை இது வழங்குகிறது.

Belgium மற்றும் Switzerland இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை பயன்படுத்துகிறது. இதன் மூலம் சிறுபான்மையினருக்கு அதிகளவு பிரதிநிதித்துவம், பாதுகாப்பு  இதில் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. உதாரணமாக பெல்ஜிய அரசியல் யாப்பானது Dutch பேசும் பெரும்பான்மையினருக்கும், French பேசும் சிறுபான்மையினருக்கும் தேசிய அமைச்சரவையில் சம பிரதிநிதிதுவத்தை வழங்குகின்றது. சைப்ரஸ் அரசின் 1960 ஆம் ஆண்டைய யாப்பின் படி 2௦% துர்கிஷ் மக்களுக்கு தேசிய பாராளுமன்றத்தில் 3௦% ஆன ஆசனங்கள் வழங்கப்பட்டது.

Proportionality என்பது நட்புறவு ஜனநாயகத்தின் ஒரு சிறந்த உபாயமாகக் காணப்படுகிறது. இங்கு ஒதுக்கீடுகள் நடுநிலையாக மற்றும் பாரபட்சமற்ற வகையில் தரமானதாக மேற்கொள்ளப் படுகின்றது. இது தீர்மானம் எடுத்தல் செயற்பாட்டின் போது உருவாகும் முக்கிய பிரிவினைவாத பிரச்சினைகளை நீக்கி நட்புறவு அரசாங்கத்தின் சுமையை குறைக்கின்றது.


பரஸ்பர இரத்ததிகாரம் (Mutual Veto)

mutual or minority veto என்பது சிறுபான்மையினரின் முக்கிய நலன்களுக்கு எதிராக பெரும்பான்மையோர் வாக்களிப்பதில் இருந்து பாதுகாப்பையும் உத்தரவாதத்தையும் இது தருகின்றது. பாரிய கூட்டணியானது சிறுபான்மை பிரிவுகளுக்கு முக்கியமான அரசியல் பாதுகாப்பை வழங்குகிறது, ஆனால் அது நம்பகமான பாதுகாப்பை வழங்குவதில்லை. பாரிய கூட்டணியில் தீர்மானங்களானது பொதுவாக பெரும்பனமையினர் வாக்குகள் மூலமேதான் உருவாக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு ஏனைய கூட்டணி பங்காளர்களைப்போல் அதிகாரத்துடன் செயற்படுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. அவர்கள் கட்டாயத்தின் பேரிலும் கூட்டணியுடன் இணைந்து வாக்களிக்கலாம்.

Lijphart பரஸ்பர வீட்டோவிற்கு வழக்கத்தில் உள்ள கருத்துகளின் படி வரைவிலக்கணம் கூறவில்லை. பரஸ்பர வீட்டோ ஆனது எவ்வாறான தனித்துவ பண்பை இங்கு எடுக்கும் என்பது தொடர்பில் Lijphart கூறத்தயங்குகிறார். இந்த பரஸ்பர வீட்டோ வித்தியாசமான வடிவங்களை எடுக்கின்றது. அவையாவன absolute veto or suspensive veto and informal veto or formal veto. இந்த வீட்டோ வடிவங்கள் பொதுவாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியிலும் இருக்கலாம். மேலும் பொதுவாக எல்லா முடிவுகளிலோ அல்லது சந்தர்ப்பத்திற்கேற்ற சில தனிப்பட்ட முடிவுகளில் அதாவது கல்வி, கலாசாரம் பற்றிய விடயங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம் .

நடைமுறையில் இந்த ஏற்பாடு மிகவும் இன்றியமையாத அடிப்படை விடயங்களைக் கொண்டிருப்பதோடு Belgium இல் நட்புறவு ஜனநாயக ஏற்பாட்டில் இந்த வீட்டோ அதிகாரம் மொழி ரீதியிலான குழுக்களுக்கு கல்வி, கலாசாரம் போன்ற விடயங்களில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் வழங்கப்பட்டது அத்தோடு முறைசாரா வகையில் சுயாட்சிக்கான உத்தரவாதம் குடும்பங்கள், மதரீதியான விடயங்களுக்கும் வழங்கப்பட்டது.

Lijphart நட்புறவு ஜனநாயகத்தை அடைய பாரிய பாராளுமன்ற கூட்டணி, பிராந்திய சுயாட்சி, சமபங்கு வகித்தல், பரஸ்பர இரத்ததிகாரம்  இவை அனைத்தும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார். ஆனால் ஒரு நட்புறவு ஜனநாயகத்தை கொண்டு செல்ல இதனோடு இன்னும் பல விடயங்கள் தேவைப்படலாம்  
.
நட்புறவு ஜனநாயகத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் 

நட்புறவு ஜனநாயக கோட்பாட்டின் வளர்ச்சி ஆரம்பத்தில் மேற்கு ஐரோப்பாவில் இடம்பெற்றது. அதாவது Netherlands, Austria, Belgium, மற்றும் Switzerland இல் நட்புறவு ஜனநாயக ஏற்பாடுகள் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தாண்டி Lebanon, Malaysia, Suriname, Cyprus மற்றும் India விலும் இதன் விரிவாக்கம் இடம்பெற்றது. நட்புறவு ஜனநாயக ஏற்பாடுகள் சில நாடுகளில் வெற்றியளித்தது மட்டுமன்றி சில நாடுகளில் தோல்வியும் அடைந்தது. குறிப்பாக Africa நட்புறவு ஜனநாயக ஏற்பாடுகளுக்கு ஒரு சுடுகாடாக விளங்கியது அத்தோடு இந்த ஏற்பாடுகள் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இருந்து தள்ளிவைக்கப்பட்டது. சில அரசியல் விஞ்ஞானிகள் நட்புறவு ஜனநாயக ஏற்பாடுகள் ஒரு “சிதைவுத் திட்டம்” என அவநம்பிக்கையை வெளிப்படுத்தினர். ஆனால் நடைமுறை நிகழ்வுகளானது நட்புறவு ஜனநாயக ஏற்பாடுகள் மீள்உருவாக்கம் அடைவதைக் காட்டியது.

இத்தகைய மீள்உருவாக்கத்தை Macedonia, Afghanistan, Iraq மற்றும் Kenya வில் அடையலாம் காணப்பட்டது. இதனால் நட்புறவு ஜனநாயகத்தின் வளாச்சி அதன் ஆரம்ப பகுதிகளில் இருந்து வேறு இடங்களுக்கும் நகர்வது அதன் வளர்ச்சி ஒரு உயர் புள்ளியில் செல்வதை எமக்கு காட்டுகின்றது  

. 
இதனை பின்வரும் அட்டவணை மூலம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
Expansion of Consociational Democracy


Classic cases



Past cases

Contemporary cases

Netherlands (1917-67)
 Belgium (1918 – )
 Switzerland (1943 – )
 Austria (1945-66)
 Luxemburg
 Liechtensten










Lebanon ( 1943-75)
India (1947-64)
Netherlands Antilles (1950-85)
Suriname (1950-85)
Malaysia (1955-69)
Nigeria (1957-66)
Columbia (1958-74)
 Cyprus (1960-63)
 Fiji (1970-87)
 Northern Ireland (1973-74)
 Zimbabwe (1980-87)
 Czechoslovakia (1989-93)
 South Africa (1993-96)


Malaysia (1971 – )
 South Tyrol (1972 – )
 Lebanon (1989 – )

New wave
 Bosnia-Herzegovina (1995-)   
 Burundi (1998 – )
 Northern Ireland (1998 – )
 Macedonia (2000 – )
 Afghanistan ( 2004 – )
 Iraq ( 2005 – )
 Kenya (2008 – )

(Source: (Taylor, 2009, p. 6)

நட்புறவு ஜனநாயக ஏற்பாடுகளும் இலங்கையும்         

இலங்கை நாடானது பல இன, மொழி, கலாசாரங்களைக் கொண்ட நாடாக காணப்படுகிறது. பல்லின சமூகங்கள் வாழும் நாடுகளில் இன ரீதியான மோதல்கள் ஏற்படுவது எவ்வாறு சாத்தியமோ அவ்வாறே இலங்கையிலும் இன ரீதியான மோதல்கள் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இன ரீதியான பிரிவினைகள் காணப்பட்டாலும் அது சுதந்திரத்தின் பின் மிக மோசமான வகையில் வெளிப்பட்டது.

1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்பு பிரித்தானியர் பெரும்பான்மை இனமான சிங்களவர்களிடையே அதிகாரத்தை வழங்கிச்சென்றனர். இதன் பின்னர் உருவான சிங்கள-தமிழ் இனங்களுக்கு இடையிலான அரசியல் வேறுபாடு தற்காலம் வரையும் நீடித்து வருகின்றது. சுதந்திரத்திற்கு முன்னரான காலப்பகுதியில் பிரித்தானியர் எவ்வாறு இலங்கையரை அடிமைப்படுத்தினானோ அவ்வாறே பெரும்பான்மை சிங்களவரும் சிறுபான்மையினரை குறிப்பாக தமிழர்களை அடிமைப்படுத்தத் தொடங்கினர். சிறுபான்மையினருக்கு எதிராக உருவாக்கப்பட்ட பிரஜாஉரிமைச் சட்டம், தனிச்சிங்களச் சட்டம், குடியேற்றவாதம், பல்கலைக்கழக தரப்படுத்தல் சட்டம், பௌத்த மதத்திற்கு யாப்பில் முன்னிரிமை அளித்தல் போன்ற பாராளுமன்ற சட்டங்கள் போன்றன தமிழ் பிரிவினைக்குழுக்கள் உருவாகி வடகிழக்கை தனிநாடாக்கும் பிரிவினைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையின் இவ் இனப்பிரச்சினையை தீர்வுக்கு கொண்டுவர பல்வேறு தீர்வுத் திட்டங்களும், உடன்படிக்கைகளும், பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றது ஆனாலும் அவை மிகக்குறுகியதாகவும் அல்லது காலங்கடந்ததாகவும் காணப்பட்டது. இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் அவர்களுடைய இலக்கை அடைய முடியாது போனதிற்கு காரணம் அதிகாரப்பகிர்வு பெரியஅளவில் கொள்கை உருவாக்குபவர்களால் புறக்கணிக்கப்பட்டமையே ஆகும். இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு வரலாற்றில் இரண்டு முக்கியமான அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் இடம்பெற்றன அவை Indo-Lanka Peace Accords of 1987 மூலம் வழங்கப்பட்ட மாகாண சபைகள் முறைமை அடுத்து மாதிரி யாப்பு முன்மொழிவு (Draft Constitution of 1997) என்பவை ஆகும்.

இவ்விரு தீர்வுத்திட்டங்கள் தோல்வி அடையக் காரணம் நட்புறவு ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகள் அடையப்பெறாமையே ஆகும். நட்புறவு ஜனநாயகத்தை நிலைநிறுத்தக் கூடிய நிபந்தனைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் உள்ளது, ஏனெனில  இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், இனங்களுக்கு தீர்வு  வழங்கப்படுவதற்கும் உள்ள நட்புறவு ஜனநாயகத்தின் முக்கிய பண்புகளான executive power sharing and group autonomy என்பவற்றை இலங்கையில் நிலைநிறுத்த முடியாமல் உள்ளதே இந்த power sharing திட்டங்கள் தோல்வி அடையக்காரணம் ஆகும்.


இலங்கையின் அதிகாரப் பகிர்வு அனுபவங்கள்

இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளில் வெற்றியளிக்காததும்,   குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஏற்பாடாக Provincial Councils and the proposed Draft Constitution of 1997 என்பவற்றைக் கூறலாம்.

13வது திருத்தம் பற்றிய மதிப்பீடு

14 November 1987 இல் 13வது அரசியல் அமைப்பு திருத்தம் உருவாக்கப்பட்டு மாகாணங்களுக்கு என மத்திய அரசிடம் இருந்து அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த மாகாண அரசுகளை மேற்பார்வை செய்ய மத்திய அரசினால் ஒரு கவர்ணர் நியமிக்கப்படுவார். யாப்பின் அதிகாரங்கள் மத்திய, மாகாண, பொதுவானவை என வரையறுக்கப்பட்டன. மாகாண சபை முறையில் பல குறைபாடுகள் காணப்பட வருகின்றது. அதாவது land settlement and maintenance of law and order போன்ற மிக முக்கிய அதிகாரங்கள் திருத்தத்தில் கூறப்பட்டதன் படி மாகாணங்களுக்கு வழங்கப்படவில்லை. வடகிழக்கு மாகாண சபைகளுக்கு நிதி அதிகாரம் வழங்கப்படாமை அவை நிதி விடயங்களில் மத்திய அரசையே சார்ந்து இருந்தது. இதனால் 13வது அரசியல் அமைப்பு திருத்தம் இலங்கை அரசு தமிழர்களுக்கு விட்டுக்கொடுத்த அதிகாரத்தை மைய்யப்படுத்திய சுயாட்சி என்று கூறுவதில் ஆச்சரியமில்லை.

Edrisinha (1998) குறிப்பிடுவதன் படி “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இலங்கையில் காணப்படுவதால் அதிகாரங்களை அவ்வளவு இலகுவில் பெறமுடியாத நிலை காணப்படுகிறது. கல்வி, சுகாதாரம் போன்ற அதிகாரங்களை மாத்திரம்தான் எளிய அமைச்சர் உத்தரவு மூலம் பெறலாம்.

1997இல் முன்மொழியப்பட்ட யாப்பு மாதிரி பற்றிய மதிப்பீடு   

03 August 1997 இல் People’s Alliance அரசாங்கத்தினால் ஒரு மாதிரி யாப்பு முன்மொழிவு வரையப்பட்டது. இந்த யாப்பானது பிரதிநிதித்துவம், நீதி, நிதி அதிகாரங்களை சிறுபான்மையினருக்கும் வழங்கி இருந்தது. மத்திய அரசின் அதிகாரங்கள் மறுசீரமைக்கப்பட்டது. பிராந்தியத்திற்கும், மத்திக்கும் இடையிலான அதிகாரங்கள் பகிரப்பட்ட “regional councils” எனும் வடிவத்தின் மூலம் இனக்குழுக்களுக்கு பிராந்திய சுயாட்சி வழங்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசின் அதிகாரங்கள், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் இந்த பிராந்திய குழுக்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் இது பாரிய அதிகாரமுள்ள சுயாட்சி வடிவமாகவும் இருந்தது.

இந்த பிராந்திய சபைகளில் consociational theorists குறிப்பிட்டதன் படி பொருளாதார சமத்துவம் வழங்குவது தொடர்பில் உத்தரவாதம் காணப்படவில்லை. மேலும் இந்த யாப்பு முன்மொழிவு பெரும்பான்மை இனத்தவரின் மதமான பௌத்ததிற்கு முன்னுரிமை வழங்கியது. பொலிஸ் மற்றும் பொதுச்சேவையில் ஏனைய இனக்குழுக்கள் உத்தியோகம் பெறுவது பற்றியும் குறிப்பிடவில்லை, அத்துடன் கலப்பு இனங்கள் பற்றிய தெளிவின்மை காணப்படுவதும் இங்கு ஆபத்தாக உள்ளது. ஆனாலும் இந்த ஏற்பாட்டில் பிராந்தியங்களுக்கு நிதி, நிர்வாக அதிகாரங்கள் பகிரப்படுவது தொடர்பில் தெளிவு காணப்படுகிறது.   

நட்புறவு ஜனநாயக சிந்தனைக்கான தேவை

சுதந்திரத்தின் ஆரம்ப காலத்தில் இலங்கை சர்வதேசத்தின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு நாடாக காணப்பட்டது. ஆசியாவில் பொருளாதாரத்தில் முன்னணி பெற்ற செழிப்பு நாடாகவும் பல்வேறு இனங்கள் இணைந்து வாழ்வதற்கு அமைதியான இடமாகவும் விளங்குகின்றது. ஆனாலும் 19501960 இடையில் இலங்கையின் இரு பிரதான இனங்களுக்கு இடையே கசப்புணர்வுகள் வளர்ந்ததோடு உறவுகளின் ஸ்திரத்தண்மையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இவ்வாறான நிகழ்வுகள் அரசியல் அதிகாரத்தை ஒருமுகப்படுத்தியதோடு சிங்களவர் ஆதிக்கமுள்ள இந்த நாட்டில் ஏனைய இனக்குழுக்கான சுயாட்சியும் மறுக்கப்படுகிறது. இன, மத, மொழி ரீதியில் பெரும்பான்மை வகித்த சிங்கள உயர்அடுக்கினரிடம் பிரித்தானியர் அதிகாரத்தை வழங்கினர். இதனால் The classic majoritarian system எனும் மனப்பாங்கு சிங்களவர்களுக்கு ஏற்பட்டது.

நிர்வாகத்தை பகிர்வதற்க்காக வழங்கப்பட்ட 13வது அரசியல் அமைப்பு திருத்தம் திருப்தியுற்ற வகையில் காணப்படாததால் தமிழ் போராளிக்குழுக்கள் கெரில்லா பாணியிலான யுத்தங்களை ஆரம்பித்தத்துடன் தமிழ் தலைவர்களும் மிதவாதப்போக்கை கடைப்பிடிக்கத்தொடங்கினர். 1997 இல் முன்மொழியப்பட்ட அரசியல் அமைப்புத்திருத்தமும் பிராந்திய அமைப்புகளுக்கு அதிகாரத்தை மத்தியில் பகிர்ந்தளித்த விடயமானது majoritarian-style ஐ தாண்டி காணப்படவில்லை, இந்நிகழ்வும் கூட மோதலுக்கு ஓர் அடிப்படைக்காரணியாக உள்ளது. திலிருந்து Lijphart இனால் முன்மொழியப்பட்ட உயர்வர்க்கத்தின் ஒத்துழைப்பின் கூடிய நட்புறவு ஜனநாயகத்தின் பண்புகளை இலங்கை அடையவில்லை என்றே கூறலாம்.

இலங்கையில் இனங்களுக்கு இடையே வேறுபாடுகள் காணப்பட்டாலும் இது ஒரு சிறிய நாடாக இருப்பதால் பல இனக்குழுக்களை ஒன்றிணைப்பதற்கு எந்தவொரு வெளிப்புற அச்சுறுத்தலும் இல்லாமல் உள்ளது. மேலும் மொத்த சனத்தொகையில் 74% சிங்களவர்களும்  18% தமிழர்களும் இருப்பது சமமாக அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது சாத்தியமான ஒன்றாகக் காணப்படுவதில்லை. Lijphart இன் கூற்றுப்படி நட்புறவு ஜனநாயகத்தின் பண்புகள் அடையப்படாது போனாலும், நட்புறவு ஜனநாயகத்தை ஏற்படுத்துவது கடினம்தான் ஆனால் அது அசாத்தியமான ஒன்றல்ல என்பதாகும்.

இலங்கையில் நட்புறவு ஜனநாயக ஏற்பாடுகள் தோல்வியுறக் காரணம் அதிகாரப் பகிர்வின் முக்கியத்துவத்தை கொள்கை உருவாக்குவோர் புறக்கணித்தமை ஆகும். இதனால் இனப்பிரச்சினை தொடர்பில் சரியான தீர்வை அடையமுடியாது போனது. நட்புறவு ஜனநாயகத்தின் மூலம் பல்வேறு இனக்குழுக்கள் உள்ள ஒரு நாட்டில் ஒரு சிறந்த ஆட்சியை ஏற்படுத்தலாம் என்பதனை நாம் அயர்லாந்து அதிகாரப்பகிர்வில் இருந்து கண்டு கொள்ளலாம். இலங்கையில் இனக்குழுக்களுக்கு இடையே நிரந்தர சமாதானத்தையும், சக வாழ்வையும் கட்டியெழுப்ப வேண்டுமாயின் Draft Constitution of 1997 ஐ அடியொற்றிய வகையில் ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும் அதோடு அதில் காணப்படும் பல்வேறு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு consociationalism and federalism அதில் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறானதொரு தீர்வு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு நல்ல பதிலைத்தரும் என்பதில் ஐயமில்லை.

Lijphart இன் நட்புறவு ஜனநாயக ஏற்பாடுகள் பல்லினம் வாழும் நாடுகளில் ஏற்படும் இனரீதியான, அதிகாரரீதியான பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர வழங்குவதோடு நாட்டை நிலைத்து நிற்கும் அபிவிருத்திப் பாதைக்கும் இட்டுச்செல்கிறது என்பதை நாம் அவதானித்தோம் ஆனால் நட்புறவு ஜனநாயக ஏற்பாடுகள் தொடர்பில் குறைகள் இல்லை என்று மட்டும் குறிப்பிட முடியாது.

நட்புறவு ஜனநாயகம் தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. Van Schendelen (1984) என்பவர் குறிப்பிடும் போது நட்புறவு ஜனநாயகமானது அனுபவ ஆராய்ச்சியின் அடிப்படையில் அமையவில்லை என்கின்றார். Lijphart கூறிய ஜனநாயகத்தின் கூறுகளை பன்மைத்துவ சமூகத்தில் அளவிடுவது என்பது பஞ்சைப் போன்று (fuzzy) துல்லியமாக அளவிட முடியாது இதனால் நட்புறவு ஜனநாயகக் கோட்பாடு விஞ்ஞான ரீதியான ஆய்வின் விதிமுறைகளை மீறுகிறது என்கின்றார்.

Barry (1975, pp. 502-03) என்பவரின் வாதத்தின் படி நட்புறவு ஜனநாயகம் என்பது ஒவ்வொரு பிரிவினை அடைந்த சமூகத்திற்கும் ஒரு நோய் நிவாரணி அல்ல இது மத, கருத்தியல் ரீதியில் பிளவுபட்ட சமூகங்களுக்கு பொருந்தினாலும் இனத்துவ ரீதியில் பிளவுபட்ட சமூகங்களுக்கு பொருந்தாது. நட்புறவு ஜனநாயகம் நிறுவனங்களின் முரண்பாட்டைத் தீர்த்தாலும் திடமான குழுக்களின் மோதலைத் தீர்த்தல் என்பது கடினமாகும்.

ஆனால் Lijphart இவ் நட்புறவு ஜனநாயகம் பன்மைத்துவ சமூகங்களுக்கு நடைமுறையான தீர்வு எனக்கூறுகின்றார். அதனை துணை கலாசார விரோதப்போக்கைக் கொண்ட Netherlands, Switzerland, Belgium, மற்றும் Austria வில் அனுபவரீதியில் நடைமுறைப்படுத்திக் காட்டினார் இதனால் ஜனநாயக உறுதிப்பாட்டை நட்புறவு ஜனநாயக அரசியல் ஏற்படுத்தும் என்றார். ஆனால் விமர்சகர்கள் இவ் ஏற்பாடுகள் பன்மைத்துவ சமூகத்தில் பிளவுபட்ட அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். ஆனாலும் Lijphart இன் நட்புறவு ஜனநாயகம் பல நாடுகளில் வெற்றியும் சில நாடுகளில் தோல்வியும் அடைந்ததை அவதானிக்கலாம். மேலும் இவ் ஏற்பாடுகள் இலங்கையின் பன்மைத்துவ கலாசாரத்தில் நடைமுறைக்கு வருமாயின் அது நாட்டை புதிய சமாதான, அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்லும் செல்லும் என்பதும் திண்ணமாகும்.        



             


Comments

Popular posts from this blog