பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவும் அணிசேரா அமைப்பும் 



சர்வதேச முறைமையில் எந்தவொரு அரசும் மற்றைய அரசுகளுடனான உறவின்றி தனித்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதனால் சர்வதேச சமூகத்தின் அரசுகளானது மற்றைய அரசுகளுடன் பல்வேறு விதமான உறவுகளைப்பேணி வருகின்றது. அவ்வாறே சகல அரசுகளும் சர்வதேச நிகழ்வுகளில் உள்வாங்கப்படுவது தவிர்க்க முடியாததாகும். இத்தகைய உள்வாங்கலானது முறையானதாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைகளுக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன அரசுகள் தங்களது வெளிநாட்டு கொள்கைகளை முன்னெடுக்க சர்வதேச அமைப்புகளில் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்கின்றன. இன்றைய உலகில் பலநூறு சர்வதேச அமைப்புகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அவை எதோஒரு வகையில் வெளிநாட்டு உறவுகளை முன்னெடுப்பதற்காகவும் தமது நாட்டின் தேசிய நலனை அதிகரிப்பதற்காகவும் உருவாக்கப்படுகிறது. இந்தவகையில் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்புதான் “அணிசேரா நாடுகளின் அமைப்பு” ஆகும்.

அணிசேரா அமைப்பு

அரசியல், பொருளாதரக்கொள்கைகளாக பொதுவுடைமை அணியினர் ரஷ்யா தலமையிலும் முதலாளித்துவ அணியினர் அமெரிக்கா தலைமையிலும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் போட்டியிட்டு உலகை கொள்கையால் ஆக்கிரமிக்க முயன்ற வேளை இவ்விரு அணியிலும் சேர விரும்பாது நடுநிலை கொள்கையை பேண முயற்சித்த நாடுகளின் கூட்டே அணிசேரா நாடுகள் என அழைக்கப்படுகிறது. அணிசேராக் கொள்கை பற்றி பல வரைவிலக்கணம் காணப்படுகிறது.
v  நேரு:- கூட்டுச் சேராமை என்பது எவருடனும் கூட்டு வைத்துக்கொள்ளாமல் சுயேட்சையான வெளிநாட்டுக் கொள்கையினை பின்பற்றுவதாகும்.
v  அப்பாதுரை:- கூட்டு சேராமை என்பது குறிப்பாக எந்த முகாமுடனும் சேர்ந்து இராணுவ கூட்டை கொள்ளாதிருத்தல் ஆகும்.
அணிசேரா அமைப்பு தனது முதலாவது மகாநாட்டை யூகோஸ்லாவியாவின் தலைநகரான பெல்கிரேட் இல் ஆரம்பித்தது. இது பெல்கிரேட் மாநாடு என அழைக்கப்படுகிறது.

பெல்கிரேட் மாநாடு

அணிசேரா நாடுகளின் முதல் மாநாடு யூகோஸ்லாவியாவின் தலைநகரான பெல்கிரேட் இல் 1961 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதில் 25 நாடுகள் பங்கு பற்றின. யூகோஸ்லாவிய ஜனாதிபதி டிட்டோ, இந்தோனேசியா ஜனாதிபதி சுகாமோ, எகிப்து அதிபர் காமல் அப்துல் நாசர், கானா வின் முதல் அதிபர் நிக்ருமா, இந்தியாவின் பிரதமர் நேரு இவர்களது முன்ணனியில் இவ்வமைப்பு தோற்றம் பெற்றது. சர்வதேச மட்டத்தில் மேற்கத்தைய மற்றும் கீழைத்தேய நாடுகளில் இடம்பெற்ற பனிப்போரில் நடுநிலைக்கொள்கையில் செல்ல வேண்டும் என்ற கருத்துக்களை கொண்டிருந்தனர்.

உலகில் வாழும் மக்களுள் ஐம்பத்தைந்து சதவீதத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும்கூட்டணி இது. ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) இவ்வணியில் பிரதிநிதித்துவப்படுத்தப் படுகின்றது. அபிவிருத்தி அடையும் அல்லது மூன்றாம் உலக நாடுகளுள் ஒரு பகுதியினர் இதில் அங்கத்துவம் பெறுகின்றனர். இலங்கையும் அணிசேரா அமைப்பில் ஒரு அங்கத்துவாரக தன்னையும் இணைத்துக்கொண்டது.

இலங்கையும் அணிசேரா அமைப்பும்.
1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மலர்ந்த பொதுமக்கள் யுகத்தின் தந்தை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க இலங்கை நாட்டையும் பிறகு இவ்வணியுடன் இணைத்துச் செயற்படலானார். பண்டார்நாயக்கா அணிசேரா அமைப்பில் இணையக்காரணம் இந்தியா அணிசேரா கொள்கையை பின்பற்றியமையே ஆகும்.

இக்கோட்பாட்டின் படி இலங்கை எம்முகாமுடனும் இணையாது கெடுபிப்போரில் இருந்து விலகியே நிற்கும். இரு முகாம்களிடையே போர் ஏற்படாது தடுக்கவும் உலக அமைதிக்கு ஆபத்து நேராதிருக்கவும் இலங்கை பணியாற்றும். இலங்கை அணிசேராக் கொள்கையானது பல சிறப்பு அம்சங்களைக்கொண்டு காணப்படுகிறது.

1.        கெடுபிடிப் போருக்கு எதிர்ப்பு.
2.        இராணுவக்கூட்டணிகளுக்கு எதிர்ப்பு.
3.        அதிகார அரசியலையும் விட்டு ஒதுங்கி இருத்தல்.
4.        சமாதான சகவாழ்வு, தலையிடாமை.
5.        சுதந்திரமான வெளிநாட்டுக்கொள்கைக்கு ஆதரவு. என்பவைகளாகும்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவும் அணிசேரா அமைப்பின் மாநாடுகளும்

1956 இல் இலங்கையின் பிரதமராக இருந்த SWRD பண்டாரநாயக்கா அணிசேரா கொள்கையை பின்பற்றத் தொடங்கினார். இவர் மேற்கத்தேய நாட்டங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வெளியுறவுக்கொள்கையை உருவாக்க முனைந்தார். இத்தகைய போக்கு அவர் மனைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவிடவும் இருந்தது. ஸ்ரீமா அணிசேரா நாடுகளின் மூலம் இலங்கை பல உதவிகளை அடையும் எனவும் வேறு சக்திமிக்க நாடுகளில் இருந்து ஏற்படும் ஆக்கிரமிப்பில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும் என நினைத்தார். அணிசேரா நாடுகளின் அங்கத்துவம் சர்வதேச தலைவர்களுடன் ஒரு இணைப்பை உருவாக்குகின்றது அது இலங்கைக்கு ஒரு பலம் ஆகும்.

1960 இல் பதவியேற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தனது கொள்கை பிரகடனத்தின் போது பின்வருமாறு குறிப்பிட்டார். “ வெளிநாட்டு தொடர்புகளில் எனது அரசாங்கம் வல்லரசுக்கூட்டுக்களை பொறுத்து அணிசேராமையையும், நடுநிலையையும் கடைப்பிடித்து வரும்” என்பதாகும். இந்த வகையில் அணிசேரா மாநாடுகளின் முதல் சந்திப்பு பெல்கிரேட் இல் இடம்பெற்றது.

அணிசேரா நாடுகளின் முதல் மாநாடு யூகோஸ்லாவியாவின் தலைநகரான பெல்கிரேட் இல் 1961 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதில் 25 நாடுகள் பங்கு பற்றின. யூகோஸ்லாவிய ஜனாதிபதி டிட்டோ, இந்தோனேசியா ஜனாதிபதி சுகாமோ, எகிப்து அதிபர் காமல் அப்துல் நாசர், கானா வின் முதல் அதிபர் நிக்ருமா, இந்தியாவின் பிரதமர் நேரு இவர்களது முன்ணனியில் இவ்வமைப்பு தோற்றம் பெற்றது. சர்வதேச மட்டத்தில் மேற்கத்தைய மற்றும் கீழைத்தேய நாடுகளில் இடம்பெற்ற பனிப்போரில் நடுநிலைக்கொள்கையில் செல்ல வேண்டும் என்ற கருத்துக்களை கொண்டிருந்தனர்.

இந்த மாநாட்டில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டார். பெரும்பாலான குறைவிருத்தி நாடுகள், அணிசேராக்கொள்கையில் நம்பிக்கை கொண்டிருப்பது ஒரு எதிர்பாராத நிகழ்ச்சியல்ல. பொருளாதாரத்துறையில் இந்நாடுகள் எதிர்நோக்கும் பெருஞ்சுமையான முயற்சிகளும், அவை தம் முயற்சிகளில் வெற்றிகாண தம் நாடுகளிலுள்ள குறைவான மூல வளத்தை தியாகம் செய்ய வேண்டியுள்ளமையும் அறிந்துள்ளன. இலட்சிய ரீதியில் முகாங்களிடையே நிலவுகின்ற நெருக்கடி நிலை பொருளாதார சமத்துவமின்மையால் ஏற்படுகிறது என்பதையும் அவைகள் உணர்ந்துள்ளன....” என்று கூறினார். யூகோஸ்லாவியா விஜயத்தை முடித்துக்கொண்டு வெளியிட்ட கூட்டு அறிக்கை ஒன்றில், “பாதுகாப்பு பிரச்சினைகள் துரிதமான பொருளாதார அபிவிருத்தி என்பவற்றுக்கு அணிசேரா நாடுகளின் ஒன்றிணைந்த நடவடிக்கைகள் அவசியம்” எனக்குறிப்பிட்டார்.

1964 இல் கெய்ரோவில் நடந்த அணிசேரா மாநாட்டில் குடியேற்றவாதம், ஆயுத உற்பத்தியின் பெருக்கம் என்பவற்றை எதிர்க்கும் கருத்துக்களை வலியுறுத்தி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா மூன்று பிரேரணைகளை கொண்டு வந்து நிறைவேற்றினார். அவை முறையே:

1. முன்னர் அணு ஆயுதங்களினின்றும் தவிர்க்கப்பட்ட பிரதேசங்களையும் சமுத்திரங்களையும், உள்ளடக்கக்கூடியதாக அணுஆயுத சுதந்திர பிரதேசங்கள் என்ற கொள்கையினை ஆக்குதல்.
2. எல்லா அணிசேரா நாடுகளும், அணுவாயுதங்களைத் தாங்கிவரும் விமானங்கள், கப்பல்கள் என்பவற்றை தமது துறைமுகங்களுக்கு உள்ளேயும் விமான நிலையங்களுக்கு உள்ளேயும் நுழையவிடாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.
3.        எல்லா வல்லரசுகளும் முன்னரே காலனிகளில் கொண்டிருந்த இராணுவத் தளங்களைக் கைவிடுவதோடு, அத்தகைய இடங்களில் ஆக்கிரமிப்பின் போது பயன்படுத்தும் நோக்குடன் புதிய தளங்களை அமைக்கக்கூடாது.
போன்றவைகளாகும்.

அணிசேராக் கொள்கைத் தொடர்பாக புதிய பிரேரணைகளை இலங்கை முன்வைத்ததோடு அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் முன்னணி பங்கு வகித்தது. 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லுசாக்காவில் நடந்த அணிசேரா நாடுகளின் மூன்றாவது மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவ்வமைப்பின் உப தலைவராக நியமிக்கப்பட்டார். “ஏகாதிபத்தியத்திற்கும் காலனித்துவத்திற்கும் எதிராகத் தேசிய விடுதலைக்காகப் போராடும் சகல இனங்களுக்கும் இலங்கை உதவியும் ஒத்துழைப்பும் வழங்கும்” என தனது உரையின் இறுதியில் தெரிவித்திருந்தார். 1973 மே 13ம் திகதி அல்ஜீரியாவில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் நான்காவது மாநாட்டில் இலங்கைப்பிரதிநிதிகளுக்கு தலைமை தாங்கிச்சென்றிருந்தார். 1971 ஜனவரியில் சிங்கப்பூரில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் பிரதமர்களின் மாநாட்டில் இலங்கைப்பிரதிநிதியாகவும் ஸ்ரீமா கலந்துகொண்டார்.

1976 ஓகஸ்ட் மாதம் 16ம் திகதி இலங்கையில் 86 நாடுகள் கலந்து கொண்ட அணிசேரா நாடுகளின் ஐந்தாவது மாநாடு ஆரம்பமானது. இம்மாநாட்டின் போது அணிசேரா நாடுகளின் தலைவராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா நியமிக்கப்பட்டார். புத்தெழுச்சி பெற்ற ஒரு மகாநாடாக அணிசேரா நாடுகளின் ஏனைய தலைவர்கள் இதனை வர்ணித்தனர். உலகில் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ இப்பெருமையை இலங்கை அடைவதற்கு முத்தாய்ப்பு வைத்தவர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள். உலகின் முதல் பெண் பிரதமர் என்பதனால் இவரின் மதிப்பு முன்றாவது நாடுகளில் மாத்திரமல்ல மேற்கத்தைய வல்லரசு நாடுகளிலும் அதி சிறப்பாக மேலோங்கிப் பிரகாசித்தது.

உலகின் முதல் பெண் பிரதம அமைச்சரைக் காணவும், அவரோடு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஏனைய உலகத் தலைவர்கள் மத்தியில் பேரார்வம் கூடிநின்றது. எனவே, இவரை நேரில் கண்டுகொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் உலகத் தலைவர்கள் பலர் எமது மண்ணில் முதன் முதலாகக் கால்பதித்தனர். இதில் கியூபாவின் பிடல்காஸ்ரோ, லிபியாவின் முஹம்மர் அல் - கத்தாபி, யூகோஸ்லேவியாவின் டிட்டோ, அல்ஜீரியாவின் ஹுரி பூமிதீன், இந்தியாவின் இந்திரா காந்தி, கானாவின் என் குர்மா, உகண்டாவின் இடிஅமீன், பஹ்ரைன் தேசத்தின் ஷேக் ஈஸா பின் கலீபா, ஸாம்பியாவின் கெனத் கவுண்டா, எகிப்தின் அன்வர் சாதாத், பலஸ்தீனத்தின் யார் அரபாத் போன்றவர்களை இங்கு முக்கியமாகக் குறிப்பிடலாம். உலக நாட்டுத் தலைவர்கள் இவ்வளவு தொகையினர் இலங்கை விஜயம் செய்தது இதுவே முதற்தடவை. இது எமது நாட்டு வரலாறு குறித்து வைத்துள்ள ஒரு சிறப்பம்சம் எனலாம்.

1979இல் கியூபா நாட்டில் ஹவானா நகரில் ஆறாவது மாநாடு நடைபெறும் வரை அப்பதவியில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா இருந்தார். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் இந்த மாநாட்டின் போது இந்து சமுத்திரத்தை சமாதான பிராந்தியமாகுதல், காலனித்துவ நாடுகளில் கடத்தப்பட்ட புராதன சொத்துக்களை மீளப்பெறுதல், அணிசேரா நாடுகளுக்கான வர்த்தக வங்கி ஒன்றை ஸ்தாபித்தல் ஆகிய மூன்றையும் மாநாடு அங்கீகரித்தது.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்க செயற்பாட்டில் அணிசேரா அமைப்பு.

சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையிலான அரசாங்கம் பெற்றோலிய விநியோகம், தேசிய கொள்கைகள், தேசிய மற்றும் இறப்பர் தோட்டம் பற்றிய விடயங்களில் இலங்கை மேற்கத்தேய அரசாங்கங்களுடன் மோதிக்கொண்டது. மேற்குலகின் சதியுடன் 1971 ஏப்ரல் 5 இல் இலங்கையில் ஒரு இளைஞர் கிளர்ச்சி (JVP இளைஞர்கள்) வெடித்தது. இது தொடர்பில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஒரு வேண்டுகோளை சர்வதேச சமூகத்துக்கு விடுத்தார். அப்போது இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிசேரா நாடுகளில் இருந்து உதவிகள் பறந்து வந்தன.

அணிசேரா நாடுகள் பல மத்தியஸ்தத்தில் ஈடுபட்டுள்ளன. 1962 டிசம்பர் 10 இல் இந்திய சீன பிரச்சினைக்கு தீர்வுகாண ஆறு நாடுகள் கொழும்பில் சந்தித்தன. (எகிப்து, பர்மா, கம்போடியா, இலங்கை, கானா, இந்தோனேசியா) பேச்சுவார்த்தையில் சீனா  விட்டுக்கொடுக்காமையினால் மாநாடு தோல்வியில் முடிந்தது. பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பின் இரு நாடுகளுக்கும் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சினையை சுமுக நிலைமைக்கு கொண்டுவந்தார். இதன் படி கைப்பற்றிய பிரதேசத்தில் இருந்து 20KM தொலைவுக்கு சீனா திரும்பிச்செல்ல வேண்டும் எனும் முடிவு பெறப்பட்டது.

அணிசேரா நாடுகளின் அங்கத்துவம் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவும் என ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா எதிர்பாத்தார். அவரின் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தம், மேற்குலகின் பொருளாதாரத் தடை என்பவவை ஏற்பட்டது. சர்வதேச உதவி வழங்கும் அமைப்பான உலக வங்கி, உலக நாணய நிதியம் என்பவையும் மேற்குலகின் கட்டுப்பாட்டில் இருப்பதால் போதிய நிதியை வழங்கவில்லை. இந்த இக்கட்டான நிலையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்துக்கு சீனா 150மில்லியன் கடனுதவியையும்  100மில்லியன் உடனடிக்கொள்முதலுக்காக வழங்கியது. அதன் மூலம்  40,000 தொன் அரிசியை சீனாவிடம் இருந்தே இலங்கை பெற்றுக்கொண்டது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா சீனா, அணிசேரா அமைப்பு இரண்டிடமும் ஒரு நல்ல உறவையே பேணினார்.

இன்றும் அணிசேரா அமைப்பு பல துணை அமைப்புகளை உருவாக்கி அதன் செயற்பாடுகளை வெற்றிகரமாக செய்துகொண்டு வருகின்றது. அணிசேரா நாடுகளின் எண்ணிக்கை இப்போது 120ஆக பல்கிப் பெருகியுள்ளது. வேறு 17 நாடுகள் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன. 1979 ஆம் ஆண்டு கியூபாவின் தலைநகர் ஹவானாவில்தான் இதன் சட்ட வடிவம் உருவாக்கப்பட்டது. வல்லரசு பேராதிக்கம், காலனித்துவம், நவ-காலனித்துவம், இனவாதம், சகல வித வெளிநாட்டுத் தலையீடு, நாடுகள் மீதான ஆக்கிரமிப்பு, வெளிநாட்டு ஊடுருவல், வல்லரசு நாடுகளின் வெறி, அதிகார அரசியல் வெறி என்பவற்றுக்கு எதிராக எழுந்து நிற்கக்கூடிய ஒரு பலம்மிக்க விரோத சக்தியாக விளங்க வேண்டும் என்ற குறிக்கோளுடனையே இந்த அணிசேரா நாட்டுப் பேரணி தோற்றுவிக்கப்பட்டது. இவ்வருடம் கூட இம்மாநாடு ஈரானின் தெஹ்ரான் நகரில் நடைபெற்றது. இது 16வது மாநாடு ஆகும்.

இலங்கை பொருளாதார, பாதுகாப்பு நலனுக்காக ஆரம்பத்தில் அணிசேரா அமைப்புடன் இணைந்து கொண்டது. அதன் ஆரம்ப அங்கத்துவம் இன்றும் இலங்கையை பல வழிகளில் நன்மைகளை வழங்குகின்றது. இலங்கை போர் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பின் போது மேற்கு நாடுகளை விட அணிசேரா நாடுகள் தனது ஆதரவை வளங்கியமையை கூறலாம்.

இன்று அணிசேரா அமைப்பு பல சவால்ககளுக்கு முகம்கொடுத்துள்ளது.
1.        உறுப்பு நாடுகளில் காணப்படும் பயங்கரவாதம்.
2.        மத்திய கிழக்கு மோதல்.
3.        ஈரானின் அணு செறிவூட்டல் திட்டம்.
4.        பிராந்திய மோதல் என்பவைகளாகும்.

எவ்வாறாயினும் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அணிசேரா அமைப்பு போன்ற பலமுள்ள கூட்டு அவசியமாகும். ஸ்ரீமாவின் காலத்தை விட தற்காலத்தில் அணிசேரா அமைப்பு, அதன் அங்கத்துவ நாடுகள் மூலம் கிடைக்கும் நன்மையையும் ஆதரவும் இன்று இலங்கைக்கு அதிகமாகும். அணிசேரா அமைப்பு இலங்கைக்கு நன்மையையே ஏற்படுத்துகிறது என்பது மறுப்பதட்கற்ற உண்மை ஆகும்.


ஆக்கம் : மீஸா பேகம் 


Comments

Post a Comment

Popular posts from this blog